மாரடைப்பு என்பது ஒரு பொதுவான இருதய நோய். ஆண் பெண் என வேறுபாடின்றி ஏற்படும் இந்த மாரடைப்பு, இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் மக்களை பாதித்து வருகிறது. இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி. நவீன யுகம் என்ற பெயரில் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்து கொண்டு வருகிறோம். உதாரணமாக, ஸ்மார்ட்ஃபோனை சொல்லலாம். உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது. ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தாலே போதும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அனைத்தையும் இருக்கும் இடத்துக்கே வரவழைத்து விட முடியும். அந்த அளவிற்கு உலகம் சுருங்கிவிட்டது.
இதனால், அனைவரும் எதற்கு எடுத்தாலும் மொபைல் போனையே நாடுகிறோம். நடைப்பயிற்சி, உடல் உழைப்பு என்பதே மறந்துவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் உறவினர்கள் கூடி மகிழ்ந்து பேசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். ஆனால், இப்போதோ எதற்குகெடுத்தாலும் வீடியோ கால் தான், உணர்வுகள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துக்கொண்டு மகிழ்ச்சியை முழுவதும் தொழில்நுட்ப பக்கமே செலவிடுகிறோம். இதனால், இயற்கையான சிரிப்பு, மகிழ்ச்சி என எல்லாமே புதைந்துப்போய்விட்டன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முன்னோர்கள் நமக்கு வகுத்துக்கொடுத்த வாழ்க்கை முறையை முற்றிலும் தொலைத்துவிட்டோம். இதனால் மனகவலை, சோர்வு, உடற்பருமன், தனிமை போன்றவற்றில் சிக்கிக்கொள்கிறோம். இவையே உயிரை பறிக்கும் இருதய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
அதுவும் சமீபகாலமாகவே நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு வந்து இறந்துப்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த தொடர் சம்பவங்களின் அடிப்படையாக நடனமாடினால் மாரடைப்பு வருமா? என்று பலரது மனதிலும் ஒரு கேள்வி குடிக்கொண்டுள்ளது. இதற்கு மருத்துவ தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நடனம் ஆடுவது என்பது ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாக தான் கருதப்படுகிறது. உண்மையில், நடனம் ஆடுவதன் மூலம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனாலையே பலரும் நடனம் ஆட விரும்புவார்கள்.
என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், உங்களுக்கு உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் நடனம் ஆடுவது மாரடைப்பு மற்றும் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதேபோல், புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நடனம் என்பது இதயத்திற்கு சிறந்த உடற்பயிற்சிதான். இவற்றின் மூலம் உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியாகின்றன, இவை உடலை ஆரோக்கியாக வைத்திருக்க உதவுபவை. இருந்தாலும், எந்தவகையான உடற்பயிற்சியையும் அளவுக்கு மீறி மேற்கொள்ளக்கூடாது.
நீங்கள் ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், முதலில் மருத்துவரிடன் ஆலோசனை பெற்ற பின்னரே நடனம் அல்லது எந்த வகையான உடற்பயிற்சியும் மேற்கொள்வது நல்லது.
தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடற்பயிற்சி செய்யவோ, நடனமாடவோ கூடாது. அதிகப்படியான மனஅழுத்தமும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. எனவே அப்படிபட்டவர்கள் உடனே இருதய நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதேபோல், இதற்குமுன்பு மாரடைப்பு ஏற்பட்டியிருந்தால் தீவிரமாக நடனமாடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஏரோபிக்ஸ் பயிற்சிகளையும் தவிர்க்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…