இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாதிக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் அல்சர். இது உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடியது. உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை காட்டிலும் வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்களை கவனிக்காமல்விட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக ஃபாஸ்ட்புட் உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து, தலைவலி, காய்ச்சல் போல இந்த அல்சர் தொல்லையும் இயல்பான ஒன்றாகிவிட்டது.
அல்சர் என்றால் என்ன?
இரைப்பையில் உணவு செரிமானம் செய்வதற்காக சுரக்கப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு மீறி சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றை சிதைத்து புண்ணை ஏற்படுத்தும். அதுவே 'அல்சர்' என்றழைக்கப்படுகிறது.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், காபி, டீ, மென் குளிர்பானங்களை அதிகமாக குடிப்பது; அதிக காரம் நிறைந்த , மசாலா கலந்த, புளிப்பு மிகுந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது; ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது; நேரம் தவறி உணவு சாப்பிடுவது, ரொம்ப சூடாக சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது போன்ற உணவுப் பழக்கங்கள் இரைப்பை புண்ணை உண்டாக்கும்.
அதுமட்டுமல்லாமல், சுத்தமில்லாத தண்ணீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவற்றாலும், 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' என்ற கிருமி உணவுப் பாதைக்குள் புகுந்து இரைப்பை புண்ணை ஏற்படுத்துகிறது. மேலும், கோபம், தூக்கமின்மை, மனக்கவலை, ஸ்ட்ரெஸ் ஆகியவை இரைப்பை புண்ணை உருவாக்கும் காரணிகளாகும்.
காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும், தினமும் வேளை தவறி சாப்பிடுவர்களுக்கும் அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு காரணம், நமக்கு பசி ஏற்படும்போதே ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் இரைப்பையில் சுரக்க ஆரம்பித்துவிடும். அந்தசமயத்தில் நாம் உணவை சாப்பிடாமல்விட்டால், இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தை அரிக்க தொடங்கிவிடும். இதுவே நாளடைவில் அல்சராக மாறும்.
பெப்டிக் அல்சர் [Peptic Ulcer]: அதிக காரம் நிறைந்த உணவுகள், ஃபாஸ்புட் உணவுகள், மிகவும் சூடான உணவுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் 'பெப்டிக் அல்சர்' ஏற்படுகிறது. இந்த அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாயிலிருந்து வயிறு வரை உணவுப்பாதை முழுவதும் புண்கள் ஏற்பட்டு வலி, எரிச்சலை உண்டாக்கும். இந்த அல்சர் நோயிலே இரைப்பை அல்சர், ஓசோஃபேஜியல் அல்சர், மற்றும் டியோடெனல் அல்சர் என்று மூன்று வகை உண்டு. பொதுவாக, இவற்றின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
அறிகுறிகள்: வயிறு நிரம்பிய உணர்வு, நெஞ்சு வலி, குமட்டல், நெஞ்செரிச்சல், எடை இழப்பு, வயிறு உப்பசம் போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.
தமனிப் புண்கள் [Arterial Ulcer]: இந்த அல்சரானது உடலின் வெளிப்புறத்தில் வரக்கூடியது. குறிப்பாக, குதிகால், மூட்டு, கால்கள், கால்விரல்கள் போன்ற இடங்களில் வரக்கூடியவை. திசுக்களில் போதுமான அளவு இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் இந்த வகை புண்கள் ஏற்படும். இந்த புண்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தொற்றுநோயாக மாறி பரவ தொடங்கிவிடும். இது சரியாக பல மாதங்களை வரை கூட எடுக்கும். அதுவரை கவனத்தோடு இருக்க வேண்டும்.
அறிகுறிகள்: தோலில் முடி உதிர்தல்; சிவப்பு, மஞ்சள், கருப்பு நிறத்தில் புண்கள்; முழங்கால், கணுக்கால், பாதங்கள், குதிகாலில் வலி போன்றவை தமனிப் புண்களின் அறிகுறிகளாகும்.
வாய்ப்புண் [Mouth Ulcer]: வாய்ப்புண்கள் வெவ்வேறான அளவுகளில் இருக்கும். ஏதாவது சாப்பிடும்போதும், தண்ணீர் குடித்தால்கூட கடுமையான வலியை ஏற்படுத்தும். நாக்கை கடித்தல், புகைப்பிடித்தல், வாய்க்குள் ஏதாவது காயம், அமிலத்தன்மை அதிகமாவது, ஹார்மோன் மாற்றங்கள், வாய் சுத்தமின்மையால் இம்மாதிரியான புண்கள் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்: உப்பு, காரம், புளிப்பு உணவுகளை சாப்பிடும் போது வலி, எரிச்சல்; பசியின்மை, புண்களை சுற்றி வீக்கம், மெல்லுவதிலும் பல் துலக்குவதிலும் சிரமம் போன்றவை. பொதுவாக, வாயில் ஏற்படும் இந்த புண்கள் எந்த சிகிச்சையும் இல்லாமல், 2-3 வாரங்களுக்குள் சரியாகிவிடும். அதற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் இரைப்பை, வயிறு சிறப்பு மருத்துவரை சந்தித்து எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்துக்கொள்வதன் மூலம் இரைப்பையில் புண் இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பொதுவாக, இம்மாதிரியான புண்களை குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள், பிபிஐ மாத்திரைகள் இருக்கின்றன. இவற்றை சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் 90% குணப்படுத்திவிடலாம்.
ஒரு சிலருக்கு மட்டுமே மருந்து, மாத்திரை பலன் தராது, அப்படிபட்டவர்களுக்கு மட்டும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அதேபோல், முன்சிறுகுடலில் அடைப்பு உண்டானவர்களுக்கும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.
முதலில் நேரத்திற்கு நேரம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காலை உணவை எக்காரணித்திற்காகவும் தவிர்க்க கூடாது. எப்போது சாப்பிடும்போதும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
கோபம், கவலை, எரிச்சல் போன்ற மனநிலைகளின் போது சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல், காரம் நிறைந்த, மசாலா நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை முடிந்த அளவிற்கு குறைத்துக்கொள்வது நல்லது.
ஃபாஸ்புட் உணவுகள், அதிக இனிப்பு பண்டங்கள், புளித்த உணவுகள், பதப்படுத்த உணவுகளை தவிர்க்கவும். மணத்தக்காளி, முட்டைக்கோஸ் இரண்டிற்கும் இரப்பை புண்ணை குணப்படுத்தும் தன்மை அதிகம். எனவே, முடிந்தவரை இந்த இரண்டையும் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
எக்காரணத்திற்காகவும் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிட்டவுடன் படுப்பது போன்றவற்றை செய்யாதீர்கள். புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பான்மாசாலா போன்றவற்றை அறவே ஒதுக்குங்கள்.
அதேபோல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளை தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். கோபமும் மனகவலையும் உங்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அல்சர் வராமலும், வந்தாலும் குணப்படுத்தவும் முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…