ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும். அந்தவகையில், கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். முதல் மாதம் என்பது உங்களுடைய கடைசி மாதவிடாய் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, இந்த அறிகுறிகள் தான் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.
முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள்:
➥ ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்பதை முதலில் உணர்த்தும் அறிகுறி என்றால் அது மாதவிடாய் தள்ளிப்போவது தான். இது தான் முதல் அறிகுறி. அதாவது, கருத்தரித்த பிறகு உடல் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும். இதனால், மாதவிடாய் நின்றுவிடும்.
➥ கருவுற்ற முட்டை கருப்பையில் பதியும்போது, உள்வைப்பு காரணமாக லேசான இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பை கவனிக்கலாம். கருத்தரித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த லேசான இரத்தப்போக்கு வலியற்றதாகவும் இருக்கும். இருப்பினும், பிறப்புறுப்புகளைத் துடைக்கும்போது மட்டும் வலி இருக்கும். இதுவும் இயல்பான ஒன்றே.
➥ அடுத்த அறிகுறி உங்க மார்பகங்களில் தென்படும். அதாவது, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உங்கள் மார்பகங்களில் சிறிய புடைப்புகள் மற்றும் வலி இருக்கலாம். மேலும் முலைக்காம்பு கருமையாக இருக்கும். அதேபோல், மார்பக நரம்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு இருக்கும்.
➥ கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் மனநிலையில் பல மாற்றங்களை அனுபவிக்கலாம். உதாரணமாக, சிறிய சண்டையாக இருந்தாலும் அழ ஆரம்பிக்கலாம் அல்லது கவலைப்படலாம். காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கோபப்படலாம். இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாறுவதுதான்.
➥ உடலில் பீட்டா எச்.சி.ஜி அளவுகள் அதிகரிப்பதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இது கர்ப்பத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பே ஏற்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவை பகல் அல்லது இரவு என எந்த நேரத்திலும் நிகழலாம். இருப்பினும், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது.
➥ அதீத சோர்வாக உணர்வீர்கள், படுத்தாலும் தூக்கம் வராது. இதற்கு காரணம் கருப்பையில் கருவின் வளர்ச்சிக்காக உங்க உடல் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள தொடங்கும். இதனால் ஆற்றல் அனைத்தும் அதற்கே செலவாகும். அந்த சமயத்தில் உடல் ஒரு நிலையில் இருக்காது.
➥ உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் கருப்பைக்கு இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், சிறுநீரகங்கள் உடல் திரவங்களைக் கையாள அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதன் விளைவு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டும்.
➥ கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் அமைப்பில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், கரு வளரத் தொடங்குவதால் உங்க வயிறு மற்றும் குடலை மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால், மூன்றாவது மூன்று மாதங்களில் இந்த அறிகுறிகளை மீண்டும் அனுபவிப்பீர்கள்.
➥ புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தசைகளை தளர்த்துவதால், உணவு மெதுவாக குடல் வழியாக செல்கிறது. இதனால் செரிமானம் மெதுவாக நடைபெறும், இதன் விளைவு மலச்சிக்கல். ஒரு சில பெண்களுக்கு ஆரம்பகால கர்ப்ப காலத்தில் அடிக்கடி தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…