பாரம்பரியாகக் கடைபிடித்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குவது அலகு குத்துதல், காவடி எடுத்தல், மாலை அணிந்து நடைபாதை செல்தல் போன்றவை அடங்கும். இவை அனைத்துமே ஒரு புறமாக பக்தர்கள் கடவுளின் மீது வைத்துள்ள நம்பிக்கையை அதிகரித்திருப்பினும், அறிவியல் ரீதியாகவும் பல்வேறு நற்பயன்களை அளிக்கின்றன. இன்றும் பக்தர்கள் கடவுளை வேண்டி இது போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், அலகு குத்துதல் நிகழ்வு குறித்த தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக அனைத்து கோவில்களிலுமே அலகு குத்துதல் நிகழ்வு நடக்காது. ஒரு குறிப்பிட்ட கடவுள்களுக்கு மட்டுமே அலகு குத்துதல் நிகழ்வு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் படி, எக்கலா தேவி அம்மன், திரௌபதி அம்மன், காளியம்மன், எல்லையம்மன், மாரியம்மன், முனியாண்டி, கரடிப்பேச்சி போன்ற காவல் தெய்வங்களுக்கும், முருகன் கோவில்களிலும் அலகு குத்துதல் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். காவல் தெய்வங்களுக்கு திருவிழாக்கள் நடைபெறும் சமயத்திலும், தைப்பூசம் உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த சிறப்பான நாளிலும் அலகு குத்தி தங்களது வேண்டுதல்களை அளிக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறக் கூடிய கோவில் திருவிழாக்களில் காவடி எடுப்பவர்கள், பால் குடம் எடுப்பவர்கள் தெய்வ வேண்டுதல்களுக்காக, உடலிலும், வாயிலும் கூரியக் கம்பியைக் குத்திக் கொள்வர். இதுவே அலகு குத்துதல் எனப்படுகிறது. அதன் படி, திருவிழாக்களில் நடைபெறும் இந்த அலகு குத்துதல், காவடி, பால் குடம் எடுப்பதற்கு முன்னதாகவே தீபாரதனை காட்டி நடைபெறும்.
இதில், பக்தரின் வாயில் ஒரு கன்னத்தில் இருந்து, மற்றொரு கன்னத்தை நோக்கி அலகை குத்தி விடுவார்கள். இவ்வாறு குத்தப்படும் அலகின் ஒரு முனையானது திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும்.
மேலும் நாக்கில் அதாவது நாக்கை வெளியே எடுத்து, மேலிருந்து கீழாகக் குத்துவதுண்டு. உடலின் மேல் தோலில் கூரான கம்பிகளைச் சொருகி விடுவர். இவ்வாறே, உடலில் குண்டூசி, கோணி ஊசி, நீண்ட வேல், சிறுவேல் என உடலின் முதுகுப் பகுதி மற்றும் கன்னத்தில் குத்திக் கொள்கின்றனர்.
அலகு குத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் அல்ல. காது, மூக்கு குத்துவது எப்படியோ அதே போலவே, அலகு குத்துவதும். குத்தும் போது மட்டுமே வலிப்பதாகக் கூறுகின்றனர். அதன் பிறகு வலிக்காதாம். இதில், மிக அதிக நீளமுள்ள கம்பியைக் குத்திக் கொள்பவர்களுக்கும், அலகு குத்தி தேர் இழுப்பவர்களுக்கும் இதே போல, குத்தும் போது மட்டுமே வலி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அலகு குத்துதல் பல்வேறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதனைப் பற்றி இதில் காண்போம்.
✤ காவடி அலகு
✤ நாக்கு அலகு
✤ முதுகு அலகு
✤ வயிற்று அலகு
✤ வாயலகு
✤ அலகு நடனம்
இது போன்ற அலகு குத்துதல் நிகழ்வுகள் பக்தர்கள் கடவுள் மீது கொண்ட பக்தியின் காரணமாக வேண்டுதல் வைத்து நிறைவேற்றுவர். இது காலம் காலமாக நடைபெற்று வரும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…