நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
தனுசு ராசி சுயநலமின்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்கள். இருந்தாலும் இனி எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தற்போது இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் நல்லது. சிலருக்கு நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த மனக்கவலைகள் விலகி சமுதாயத்தில் கௌரவமான நிலை கிடைக்கும்.
பணி/வேலை:
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும் பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் 2023 ஜனவரிக்குப் பிறகு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில்/வியாபாரம்:
தொழில் வியாபாரத்தில் தற்போது உள்ள வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டு நீங்கள் சற்று கடினமாக உழைத்தால் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். அதிக மதிப்புள்ள முதலீடுகளை தள்ளி வைக்கவும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தற்போது சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் ஜனவரி முதல் தொழிலில் சிறப்பான நிலையை அடைவீர்கள். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது. நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு வயிறு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருங்கள். மேலும், முடிந்தவரை இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்.
குடும்பம் வாழ்க்கை:
பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கைகூடும் வாய்ப்பு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியை உண்டாகும். தற்போது உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை மேன்மையடையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
பரிகாரம்:
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும், அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் நல்லது. மேலும், கருப்பு ஆடைகள் அல்லது கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…