முதுமை காலத்தில் வீட்டில் உட்கார்ந்து ஜாலியாக நாள்களை கழிப்பது தான் பலரின் விருப்பமாக இருக்கும். ஓய்வூதியம் பெறும் முன்னாள் பணியாளர்கள் பலரும் இதையே விரும்புகின்றனர். ஆனால், இதற்கு மாற்றாக பலரும் தங்களின் 50 வயதைக் கடந்து புதிய தொழில் தொடங்கி சாதனை படைத்துள்ளனர்.
அதில் முக்கியமாக பேசப்படும் நபர் கே.எஃப்.சி உரிமையாளர் Colonel Harland Sanders தான். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் தொழில் தொடங்கி இவர் சாதித்தார். இந்த சாதனையை பலரும் வியந்து பார்த்த வேளையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு தொழில் அதிபர் தனது 79ஆம் வயதில் புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் சுகாதார காப்பீடு திட்டங்கள் என்றால் என்ன என்றே தெரியாதிருந்த வேளையில் உதித்தது தான் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ். இந்த காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கியவர் தான் வெங்கடசாமி ஜெகநாதன்.
வெங்கடசாமி ஜெகநாதன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிப்பை முடித்ததும் 1970 ஜூன் 3 ஆம் தேதி ஹெர்குலஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். சில வருடங்களில் இந்தியாவின் மாபெரும் இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அலுவலராகச் சேர்ந்தார்.
இவர் பொறுப்பேற்ற காலகட்டத்தில், அதாவது 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு 50 கோடி ரூபாய் இழப்பில் இந்த நிறுவனம் இயங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் வெளியேறியபோது நிறுவனத்தின் நிகர லாபம் 400 கோடி ரூபாயாக இருந்தது.
பின்னர் பணியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார் வெங்கடசாமி. தொடர்ந்து வீட்டில் சும்மா இருக்க வேண்டுமே என்ற யோசனையில் இருந்த அவர், 2006ஆம் ஆண்டில் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்.
அந்த நிறுவனத்திற்கு Star Health Insurance என பெயரிட்டார். தற்போது, இந்த பெயரை அறியாத எந்த ஊழியர்களும் இருக்க முடியாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. சென்னை மாதா சர்ச் சாலையில் வெறும் 30,000 ரூபாய் வாடகையில் 12 ஊழியர்கள் உடன் Star Health and Allied Insurance நிறுவனத்தை தொடங்கி நடத்தினார்.
காப்பீட்டு துறையில் தற்போது அதிக சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமாகவும் ஸ்டார் ஹெல்த் திகழ்கிறது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள இந்த நிறுவனத்தில் மதிப்பு சுமார் 30,520 கோடி ரூபாய் ஆக உள்ளது.
இந்த சூழலில், தனது 79 ஆவது வயதில், தான் வகித்த அனைத்து பதவிகளிலும் இருந்து விடுபட போவதாக இவர் அறிவித்தார். தொடர்ந்து தனது முதுமை காலத்தை வீட்டிலும், சுற்றுலா சென்றும் கழிப்பார் என்று பார்த்தால், தற்போது ஒரு மிகப்பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தான் ஒரு புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். பல நிறுவனங்களை லாபகரமாக மாற்றிய அசாத்திய மனிதர் வெங்கடசாமி தனது 79 ஆவது வயதில் என்ன தொழில் தொடங்க திட்டம் வைத்துள்ளார் என்பது தான் தொழில் துறையினரிடத்தில் பேசுபொருளாகியுள்ளது. இவர் தொடங்கினா எதாவது பெருசா தான் இருக்கணும் என்றும் பலர் முணுமுணுத்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…