இந்த காலத்திலும் கூட மூடநம்பிக்கைகளை பின்பற்றியும், நம்பியும் பல வினோத சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மூடநம்பிக்கைக்கு எதிராக எத்தனையோ வீடியோக்கள் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்துக்கொண்டிருந்தாலும் அதை காதில்கூட போட்டுக்கொள்ளாமல் ஒருசிலர் ஏமாந்து விடுகின்றனர். சில சமயங்களில் அது விபரீதத்திலும் முடிந்துவிடுகிறது.
அந்தமாதிரி ஒரு சம்பவம் தான் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த 54 வயதான விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. அய்யோ.. அடிக்கடி இப்படி கனவு வருதே என்று பயந்து போன அவர், தன் மனைவியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவரை அணுகியுள்ளனர். அந்த ஜோசியரும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் சாமியாரிடம் பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த விவசாயி, ஜோதிடர் கூறிய கோவிலுக்கு சென்று அங்கிருந்த பூசாரியை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கிறார். அந்த பூசாரியும், அவரை உள்ளே அழைத்து சென்று அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை காட்டியுள்ளார்.
பின்னர் இதில், கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நாகசாந்தி பூஜை செய்தால், உங்கள் பாவம் நீங்கிவிடும் என்று கூறியிருக்கிறார். பூசாரி, சொல்வதை கேட்டி கொஞ்சமும் ஆபத்தை உணராமல் அந்த பூஜையை செய்துள்ளார் விவசாயி. அப்போது, பூஜையின் இறுதியில் பாம்பின் முன் உங்கள் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுமாறு பூசாரி கூறியுள்ளார். பூசாரி சொன்னதை கேட்டு பாம்பு முன்பாக நாக்கை நீட்டியிருக்கிறார். ஆனால், அடுத்த நொடியே பாம்பு, அவரின் நாக்கை பதம்பார்த்துவிட்டது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி விஷம் ஏறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து விவசாயின் நாக்கை கத்தியால் அறுத்துள்ளார். இதில் நாக்கு துண்டான விவசாயில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைனையடுத்து சிகிச்சைக்காக ஈரோடு மணியன் மெடிக்கல் செண்டருக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயிக்கு தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பற்றியிருக்கின்றனர். பாம்பு கடிப்பது போல கண்ட கனவு கடைசியில் நனவாகிவிட்டதே என்று சொல்லும் அளவுக்கு விவசாயிக்கு நடைபெற்ற சம்பவம் அமைந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டுமே தவிர, மூட நம்பிக்கைகளையும் வீட்டு வைத்தியத்தையும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…