பார்வையற்ற காதலர்களுக்கு திருமண ஏற்பாடு முதல் சீர்வரிசை வரை எல்லாம் செய்து கல்யாணம் பண்ணி வச்ச வடபழனி போலீசாரின் செயல் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி சென்னை வடபழனி கோவிலில் நடந்த பல திருமணங்களுள் ஒரு திருமணம் மட்டும் ஆழ்ந்த உணர்வுகளோடு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப்பினர், வடபழனி ஏ.சி பாலமுருகன், வடபழனி காவல்நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு உள்ளிட்ட போலீஸார் பூக்களைத்தூவி வாழ்த்தி பார்வையற்ற பாலு - தமிழரசி காதலர்களின் திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைப் பற்றி பாலுவிடம் கேட்ட போது அவர் கூறியது.
"என்னோட சொந்த ஊர் ஜோலார்பேட்டை. நான் பிறகும் போதே பார்வை தெரியாமல் தான் பிறந்தேன். அதனால் என்னுடைய பெற்றோர்கள் என்னை கூட்டிட்டு போகாத ஹாஸ்பிடல்லே இல்லை. இருப்பினும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்னையுடன் பிறந்ததால் கண் பார்வை தெரிய வாய்ப்பே இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. என்னுடைய பெற்றோர்கள் தினமும் கூலிவேலைக்கு போறவங்க தான், இருந்தாலும் என்னைய எம்ஏ, பிஎட் வரைக்கும் படிக்க வச்சாங்க. நான் மதுரவாயல்ல நண்பர்களுடன் காலேஜ் படிக்கும் போது தான், அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு சார் பழக்கம் ஆனாரு.
நான் டிகிரி முடிச்ச உடன் அவர் தான் எனக்கு பீஸ் கட்டி பிஎட் படிக்க வச்சாரும். அப்புறம் எம்ஏ படிக்கவும் பல உதவிகள் செஞ்சாரு. அப்போ இருந்து இப்ப வரை எனக்கு ஒரு அண்ணனா எல்லா உதவியும் செஞ்சாரு. நான் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு போகும் போது தான் தமிழரசி எனக்கு பழக்கம் ஆனாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணோம். எங்க வீட்லையும் அவங்க வீட்லையும் திருமணம் நடத்தி வைக்கும் அளவுக்கு வசதி இல்ல. அதுனால ஆனந்த் பாபு சார் கிட்ட சொன்னோம், அப்ப அவர் "நான் இருக்கேன்" என்னும் ஒரு வார்த்தை தான் சொன்னாரு.
அவர் சொன்ன மாறியே சாப்பாடு செலவு, திருமண ஏற்பாடுன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார். அதோட, தற்போது அவர் இன்ஸ்பெக்டரா இருக்குற வடபழனி காவல்நிலையம் சார்பா எங்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்து வாழ்த்தியிருக்காங்க. அவங்களோட ஆசீர்வாதத்தோட புது வாழ்க்கையைத் தொடங்கப்போறோம்" என்ற நன்றி உணர்ச்சியோட சொல்லியிருக்கார். பாலு 2017 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பாஸ் ஆனாலும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. அது மட்டும் கிடைச்சா எங்களோட ரெண்டு குடும்பத்தையும் காப்பாத்திக்க உதவியா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த திருமணம் பற்றி வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு சொன்னது, " நான் மட்டும் இந்த உதவியை செய்யவில்லை, எங்கள் வடபழனி ஏ.சி பாலமுருகன் சார் தலைமையில்தான் செய்தோம். மேலும் நாமக்கல் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் சார்பில் 25,000 ரூபாயும் டெக்ஸ் ஷாப் சார்பில் 25,000 ரூபாயும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். அதிலும் பாலு திருமணத்திற்காக நாங்கள் லயன்ஸ் கிளப்பை நாடியபோது அதன் தலைவர் அசோக் பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்ஸி என அனைத்து சீர் வரிசைகளையும் கொடுத்து திருமணத்தையும் நல்லபடியாக முடித்துக்கொடுத்தார்கள். எங்கள் காவல்நிலைய நண்பர்கள் சார்பாக ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இதுக்கு மேலையும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…