சென்னை: அயோத்தி ராம ஜென்ம பூமி தலைமை அர்ச்சகர் உள்ளிட்டோர் ஆதிபுருஷை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபாஸ் நடித்திருக்கும் ஆதிபுருஷ் படம் பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அந்தத் திரைப்படம் வெளியானது. சுமார்ர் 600 கோடி பட்ஜெட்டில் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் அப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
பிரபாஸுக்கு அதிக மவுசு இருக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் படத்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவை தவிர சில வடமாநிலங்களும் டீசண்ட்டான ரெஸ்பான்ஸை கொடுத்தனர். ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதிபுருஷ் திரையிடப்பட்ட திரையரங்குகள் பெரும்பாலும் காற்று வாங்கவே செய்தன. இருப்பினும் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியிருக்கும் சூழலில் வசூல் 300 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய வசனம்:
இந்தச் சூழலில் படத்தில் ராவணன் பற்றி அனுமன் பேசும் வசனம், சீதை பாரதத்தின் புதல்வி போன்ற வசனங்கள் சர்ச்சையை கிளப்பின. குறிப்பாக சீதை பற்றிய வசனத்துக்கு நேபாளம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ராவணன் பற்றி பேசும் அனுமன் பேசும் வசனத்தை மாற்றியமைப்பதாகவும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆதிபுருஷுக்கு எதிராக இந்தியாவிலும் எதிர்ப்பு கொடி உயர பறக்க ஆரம்பித்திருக்கிறது. அயோத்தி ராமஜென்ம பூமியின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், அயோத்தி துறவி மணிராம் தாஸ், அனுமன் கர்ஹி கோயில் அர்ச்சகர் ராஜு தாஸ் உள்ளிட்டோர் ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டுமென கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். இதற்கிடையே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சீதை பாரதத்தின் புதல்வி என படத்தில் இருக்கும் வசனத்துக்கு நேபாளம் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த வசனத்தை படக்குழு நீக்கவோ, மாற்றவோ இல்லை என தெரிகிறது. இதனையடுத்து ஆதிபுருஷ் படம் மட்டுமின்றி அனைத்து இந்திய படங்களும் இனி திரையிடப்படாது நேபாளம் தலைநகர் காத்மண்டூ மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படம் பெரும் சிக்கலில் சிக்கியிருப்பதாக திரை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…