சென்னை: தனக்கு கொடுத்த சம்பளத்தை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த்துக்கு கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் தொடர்பான் ஃப்ளாஷ்பேக்.
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.
காலம் செல்ல செல்ல ஹீரோவாக நடிப்பதிலிருந்து ஒதுங்கிய சிவாஜி ஒருகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ அதேபோல் குணச்சித்திர வேடத்திலும் நடிகர் திலகம் தனி முத்திரையை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். அப்படி அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்படுபவை.
தான் ஹீரோவாக நடித்தபோது தனது சக போட்டியாளரான எம்ஜிஆர் 8 லட்சம் ரூபாய்வரை சம்பளமாக பெற்றபோது சிவாஜியோ 5லிருந்து 6 லட்சம் ரூபாய்வரை பெற்றார். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பிறகு தயாரிப்பாளரிடம் சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டாராம் சிவாஜி கணேசன். தன்னை அணுகும் தயாரிப்பாளரிடம் இந்த கேரக்டருக்கு எவ்வளவு கொடுக்கலாம் என உனக்கு தோன்றுகிறதோ அதை கொடு என்று மட்டும்தான் சொல்வாராம்.
அப்படி எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தபோதுகூட சந்திரசேகரிடம், 100 ரூபாய் மட்டும் கொடு போதும் படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கொடு என கூறி 100 ரூபாயை மட்டுமே அட்வான்ஸாக பெற்றார். படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு சிவாஜிக்கு எஸ்.ஏ.சி 10 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
அதேபோல் கமலுக்கு அப்பாவாக அவர் நடித்த தேவர்மகன் படம் இன்றளவும் பலரது ஃபேவரைட். குறிப்பாக படத்தில் பெரிய தேவராக சிவாஜி கணேசன் நடிப்பில் அதகளம் செய்திருப்பார். இந்தப் படத்துக்கும் தனக்கென சம்பளத்தை நிர்ணயிக்காத சிவாஜி கணேசன் படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு என்ன தோன்றுகிறதோ அதை சம்பளமாக கொடுக்கும்படி கமலிடம் கேட்க கமலோ 20 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான படமான படையப்பாவில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்க கமிட்டானார் சிவாஜி. அதுவரை தன்னுடைய அதிகபட்ச சம்பளம் 20 லட்சம் ரூபாய் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதலாக ஐந்து லட்சமோ அல்லது 10 லட்சமோ கொடுப்பார்கள் என்ற நினைப்புதான் அவருக்கு ஓடியிருக்கிறது.
படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருநாள் சம்பளத்திற்கான காசோலையை சிவாஜியிடம் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க அதை வாங்கி வீட்டுக்கு சென்ற சிவாஜி தனது மூத்த மகன் ராம்குமாரிடம் கொடுத்திருக்கிறார். காசோலையை பார்த்த ராம்குமார் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்திருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.
இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிவாஜி. ஒரு சைஃபரை தப்பா போட்டிருப்பாங்க ப்பா என சொல்லிவிட்டு என்னப்பா பத்து லட்சத்துல ஒரு பூஜ்ஜியத்தை கூடுதலா சேர்த்திருக்கீங்க என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர்களோ உங்களுக்கு இந்தப் படத்தில் நடித்ததற்கான சம்பளம் ஒரு கோடி ரூபாய். இந்த சம்பளத்தைத்தான் உங்களுக்கு தர வேண்டுமென ரஜினி எங்களிடம் சொன்னார் என கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் மணிபாரதி வெளியிட்டார். படையப்பா படத்தை ரஜினிதான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…