தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் சந்தித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துவருபவர் நடிகர் விஜய். துப்பாக்கி, மெர்சல், மாஸ்டர் என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ள விஜய், தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்துவருகிறார். இறுதிக்கட்டப் படிப்பு நடைபெற்றுவரும் நிலையில், இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தமது பிசியான நடிப்புப் பணிகளுக்கு இடையே, நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் பதிவு செய்துவருகிறார். அதுமட்டுமின்றி, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் சார்பில் இயக்கம் ஒன்றையும் தொடங்கி அவர் நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம், தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு சமூகப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த சூழ்நிலையில், அரசியலில் களமிறங்கும் நோக்கில் சில நடவடிக்கைகளை நடிகர் விஜய் கையில் எடுத்துள்ளார். அதன்படி, அண்மையில் நடந்து முடிந்த 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும், தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று நேரில் சந்திக்கிறார்.
சென்னை நீலாங்கரையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்ளும் நடிகர் விஜய், மாணவ-மாணவிகளுடன் உரையாடுவதோடு, அவர்களுக்கு ஊக்கத்தொகைகளையும் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…