பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை,கோவை, நெல்லை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஆடுகளை பலியிட்டு, அதன் இறைச்சியை 3 பங்குகளாகப் பிரித்து, முதல் பகுதியை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், 2வது பங்கை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கிய இஸ்லாமியர்கள் மீதமுள்ள 3வது பங்கை குடும்பத்தினருக்கு அளித்தனர். ஈகைத் திருநாளன்று ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முறை கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பக்ரீத் பிறந்த கதை:
இறைத்தூதர் இப்ராஹிம் நினைவாக உலகம் முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இபுராஹிமின் இறைநம்பிக்கையை இறைவன் சோதித்து பார்க்க விரும்பினான். அதன்படி அவருக்கு அடுக்கடுக்கான பல சோதனைகளை கொடுத்தான். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இபுராஹிமுக்கு இஸ்மாயில் எனும் குழந்தையை வழங்கினான். அதன்பின்னர் குழந்தையையும், மனைவியையும் அரேபிய பாலைவனத்தில் கொண்டுபோய் விட வேண்டும் என இறைவன் கட்டளை பிறப்பித்தான். அதனை அப்படியே ஏற்று இபுராஹிம் கடைபிடித்தார்.
அதன்பின்னர் ஆசைஆசையாக வளர்த்த மகனான இஸ்மாயிலை அறுத்து பலியிடுவது போன்ற கனவு கண்டார் இறைதூதர் இப்ராஹிம். இறைதூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹி எனப்படும் செய்தி இரண்டு வழிமுறைகளில் வருவதுண்டு. ஒன்று கனவின் மூலம், மற்றொன்று தேவதூதர்கள் எனப்படும் வானவர்கள் மூலம். எனவே இது இறைவனின் கட்டளையாக இருக்குமோ என நினைத்த இபுராஹிம் இந்த கனவு குறித்து தனது மகனிடமே தெரிவித்தார். மகன் இஸ்மாயில் மிக பக்குவமாக “தந்தையே இது இறைவனின் கட்டளை எனில், நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். என்னை பொறுமையாளர்களில் ஒருவராக காண்பீர்” என தெரிவித்தார்.
அதன்படி இப்ராஹிம் கூரான கத்தியை எடுத்து இஸ்மாயிலை அறுத்து பலியிட முனைந்தார்.அப்போது, இறைவன் அவரது தியாகத்தை ஏற்று, மகனை பலியிட வேண்டாமென தடுத்தார். அதன் பின்னர் சொர்க்கத்தில் இருந்து ஒரு ஆட்டை பரிசளித்து, அதனை அறுத்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் உணவளியுங்கள் என இறைவன் தெரிவித்தார்.
இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், அதனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையிலும், இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு ஈடாக அல்லா ஒரு ஆட்டை அறுத்து கொடுத்ததை நினைவு கூர்ந்தும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். பக்ரீத் பண்டிகையொட்டி தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…