எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் 2வது ஐந்தாண்டு ஆட்சி அடுத்த ஆண்டு நிறைவுக்கு வருகிறது. அதையொட்டி, நாடாளுமன்ற மக்களவைக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி, அவர்கள் சார்பில் ஒரே பிரதமர் வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் தீவிரம் காட்டிவருகிறார். இதையொட்டி, எதிர்க்கட்சி தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, வரும் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்.முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த கூட்டத்தில், எதிர்வரும் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அணி திரளும் நிகழ்ச்சியானது, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஒரு வகையில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்போதுமே இந்த விருப்பம் இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆதரவாக இல்லாதபோதும்கூட நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.
இருந்தாலும் நான் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என அப்போது கூறியது வேடிக்கையாக மட்டுமே. ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் அவர்களுக்கு பேரிழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம், என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…