போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் கரூர், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 8 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சோதனையின் முடிவில், பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த 13ம் தேதி சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, அபிராமபுரத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பு, கரூரில் செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் வீடுகள் உள்ளிட்ட வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன்பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அப்போது நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில், போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி, அவர் ஜூன் 20ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும், அப்போது வழக்குத் தொடர்பான ஆவணங்களை கொண்டுவருவமாறும் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடம் விசாரணையைத் தொடங்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அசோக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அங்கு 5 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கை தொடரும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…