அது, மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, பாஜகவுடன் கூட்டு வைத்து, ஆட்சியைப் பிடித்த நேரம். ஏற்கனவே, சரத்பவார் மருமகன் அஜித்பவராவை கட்சியில் சேர்த்து, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்து, ஆட்சியை பிடிக்க ஆசைப்பட்டு, மூக்குடைபட்டது பாஜக. வழக்குகள் ரத்தானதும் அஜீத்பவார் மீண்டும் என்.சி.பி. எனப்படும் தேசிய மாநாடு கட்சிக்கே சென்று விட்டார். அதனால், கண்ணி வைத்து காத்திருந்த பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே சிக்கினார்.
அப்போது நாடெங்கும் பாஜகவினர் வெற்றிக்களிப்பில் இருந்தனர். தமிழ்நாட்டிலும், முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சரனால், ஒரு ஷிண்டே உருவாகப்போகிறார் என, பாஜகவினர் அண்ணாமலை முதல் தொண்டர்கள் வரை மானாவாரியாக பேச ஆரம்பித்தனர். யாரந்த ஷிண்டே என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுக, அமமுக, திமுக என கட்சி மாறிவந்த செந்தில் பாலாஜியை நேரடியாகவும் பூடகமாகவும் கைகாட்டினர்.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கொங்குமண்டலத்தில் திமுக வெற்றிபெற உழைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்கு பெரும்பங்காற்றி பாஜகவினரின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டார். ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலையை தோற்கடித்திருந்த செந்தில் பாலாஜி, தொடர்ந்து பேட்டிகள், விவாதங்களில் பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் உள்ள மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. கோவை தெற்கு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது. இப்படி தமிழ் நாட்டில் உள்ள நான்கில் 2 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் இருப்பதாலும், கோவை எம்.பி. தொகுதியில் ஒருமுறை வெற்றிபெற்று இருப்பதாலும், கொங்கு மண்டலத்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக பாஜகவினர் பேசி வந்தனர். மேலும் கரூரை சேர்ந்த அண்ணாமலை, அதிமுக கூட்டணி உள்ளிட்ட காரணிகளால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அப்பகுதியில் வெல்லமுடியும் என பாஜகவினர் நம்பி வந்தனர்.
ஆனால், அவர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பெரும் சிக்கலாக கொங்குமண்டலத்தில் வளர்ந்து வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றால், தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே தோன்றுவார் என்று பயங்காட்டி வந்த பாஜக, அப்படி எந்த சலசலப்பும் இல்லாமல், தங்களது ஷிண்டே கனவு நொறுங்கிப்போனதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தது.
தனது ஐ.டி.விங் மூலம், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும் பத்து ரூபாய் செந்தில் பாலாஜிக்கே போவதாக முதலில் பிரச்சாரம் செய்து வந்தனர். மறுபுறம், அகில இந்திய அளவிலும், டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிஷோடியா, கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் போன்ற சிலரை தங்களுக்கு பணியவில்லை என, பழிவாங்கிய பாஜக, அதே பாணியை செந்தில் பாலாஜி விசயத்திலும் கையில் எடுத்தது என்கின்றனர், திமுகவினர். அதனால் தான் 2016-ம் ஆண்டு ஊழல் புகார்களை தூசி தட்டி, அமலாக்கதுறையை ஏவியதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு இல்லாத பாஜக, அதிமுகவை மிரட்டியும், திமுகவை ஆளுநர், அமலாக்கத்துறை, சிபிஐ, புலனாய்வு அமைப்புகளை ஏவியும், தன்னை அதிகாரம் மிக்க கட்சியாக பாஜக நிலை நாட்டத் துடிப்பதாக, பல்வேறு எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அனைத்து நகர்வுகளும் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருப்பதால், எந்த கட்சி அல்லது கூட்டணியினர், மக்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என்பது, தேர்தலுக்கு பின்னரே, தெரிய வரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…