தந்தை வாங்கித் தந்த ஸ்கூட்டரில் இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை சுற்றி பார்க்கும் தாயும், மகனும் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர்.
தாயின் ஆசை:
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே போகாதி என்ற இடத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி - ரத்தினம்மாள் ஆகியோரின் மகன் கிருஷ்ணகுமார் இவர்கள் குடும்பத்தில் மொத்தம் பத்து பேர் உள்ளனர். அவர்களுக்கு உணவு சமைப்பதும், அவர்களைப் பார்த்துக் கொள்வதுமே ரத்தினம்மாளின் பிரதான வேலையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ரத்னம்மாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டர். சிறிது நாட்கள் கழித்து தன் தாயிடம் சாதாரணமாக கிருஷ்ணகுமார் பேசிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலை ,திருப்பதி, திருவரங்கம் ,ஆகிய கோயில்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது அவர், உங்களை கவனித்து வளர்த்து ஆளாக்குவதிலேயே என் காலம் கடந்துவிட்டது. அப்பாவும் இறந்துவிட்டார். நான் பக்கத்து பேலூரில் உள்ள கோவிலுக்கு கூட சென்றதில்லை. இனிமேல் எந்த கோவிலுக்கு செல்ல போகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
4 ஆண்டுகளாக ஸ்கூட்டர் பயணம்:
தன் தாய் 50 வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளே இருந்து பிள்ளைகள், கணவனுக்கு தேவையானதை செய்தாரோ தவிர, தனக்கென ஒருநாள் கூட வாழவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். இவர் எந்த கோயிலுக்கும் இதுவரை தனது தாய் சென்றதில்லை என்பதை அறிந்த அவர், பக்கத்து ஊர் கோவிலென்ன இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களை எல்லாம் சுற்றி காட்டுகிறேன் என தாயிடம் கூறியுள்ளார்.
இதற்காக வேலையை விட்டுவிட்டு, கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் தனது தந்தை வாங்கி கொடுத்த ஸ்கூட்டருடன் , ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார். ஆந்திரா, மகாராஷ்டிரா ,கேரளா, சட்டீஸ்கர் ,உத்திரப்பிரதேசம், கோவா ,புதுச்சேரி ,தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புகழ்பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்குச் சென்றதுடன், நேபாள் நாட்டிற்கும் சென்றுவந்துள்ளார்.
61 ஆயிரம் கி.மீ. ஆன்மீக பயணம்:
பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று விட்டு நேற்று கும்பகோணம் வந்துள்ளனர். அவர்கள் கும்பகோணத்தில் உள்ள விஜயேந்திரர் மடத்திற்கு வந்து தரிசனம் செய்ததுடன், சிறிது நேரம் அங்கே தங்கி விட்டு, தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
கிருஷ்ணகுமார் கூறுகையில், "எனது தாய்க்காக இந்தியாவில் உள்ள கோவில்களை சுற்றி காட்டவே நான் இந்த பயணத்தை துவங்கி உள்ளேன். தனது தந்தை வாங்கி கொடுக்க ஸ்கூட்டரில் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து இரண்டு சக்கர வாகனத்திலேயே என் தாயை அழைத்துக் கொண்டு வந்துள்ளேன் . இதன்மூலம் எங்கள் பயணத்தில் எனது தந்தையும் இருப்பதாக நான் உணர்கிறேன் என்றும், ஒவ்வொருவரும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது குடும்பத்திற்காக ஒதுக்கி,தாய் - தந்தையர்கள் விரும்பியதை செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்".
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…