மாங்கல்ய பலம் நீடிக்க பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களிலேயே முதன்மையான விரதம் இந்த காரடையான் விரதம். இதை 'காமாட்சி விரதம், சாவித்திரி விரதம், கௌரி விரதம்' என்றும் சொல்வார்கள். எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனான சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரத்தைப் போற்றவும், உயிருடன் வாழும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எந்தவித குறையுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த சாவித்ரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட மனதிற்கு பிடித்த நல்ல கணவர்கள் அமையவும் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு அனுஷ்டிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த புனித தண்ணீரில் நீராடி விட்டு உபவாசத்தை தொடங்க வேண்டும். பின்னர், வீட்டை கழுவி பசுஞ்சாணத்தால் வாசலை மெழுகி அரிசிமாவினால் கோலம்போட்டு காவி வண்ணம் தீட்டி வாயில்களில் மஞ்சள் குங்குமம் பூசி மாவிலை தோரணங்களை கட்டி அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூஜை அறையில் ஒரு மரப்பலகையில் கோலமிட்டு ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி சாவித்திரி தேவியாக பாவித்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, பூஜை அறையில் இருக்ககூடிய சுவாமி படங்களுக்கு மலர் சூட்டி அலங்காரம் செய்து கொள்ளவும். பின்னர், ஒரு இலையில் இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, 3 வகையான பழங்கள் வைத்துக் கொள்ளவும். நோன்புக் கயிறு மற்றும் புது தாலிச் சரடு இரண்டிலும் நடுவில் சிறிதளவு பூவைத்து அதையும் இலையில் வைக்க வேண்டும். பிறகு வெல்ல அடை மற்றும் கார அடை இரண்டையும் நிவேதனம் செய்ய வேண்டும். அதோடு உருகாத வெண்ணெயையும் அத்துடன் வைக்க வேண்டும்.
பூஜைக்கு அனைத்தையும் தயார் செய்துவிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி, முடிந்தமும் ஒரு சரடை எடுத்து அம்மன் புகைப்படத்திற்கு சாத்திவிட்டு, 06.31 லிருந்து 06.47 மணிக்குள் கிழக்கு பக்கமாக அமர்ந்து கொண்டு மஞ்சள் சரடை கட்டிக்கொள்ளலாம் அல்லது புது தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றிக்கொண்டு காரடையும் வெண்ணெய்யும் கையில் வைத்துக்கொண்டு காரடையான் நோன்பிற்கு உண்டான ஸ்லோகங்களை சொல்லி மனதார வேண்டிக் கொள்ளவும். அதன்பிறகு கணவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் மாமனார்- மாமியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாலை 7 மணி வரை விரதம் இருந்துவிருந்து மீண்டும் அம்பாளை வணங்கிவிட்டு, கணவருக்கும் மாமனார் மாமியாருக்கு கார அடைகளைப் பிரசாதமாக அளிக்க வேண்டும். வீட்டிலுள்ள மற்ற பெரியோர்களை நமஸ்கரித்தபின் சுமங்கலிப்பெண்கள் காரடை உண்டு நோன்பை முடிக்க வேண்டும். சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.
குறிப்பு: நோன்பு இருக்கும் பெண்கள் மோர், தயிர், பால் போன்ற பொருட்களை உட்கொள்ள கூடாது.
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே!
ஸஹாரித்ரம் தராம்யஹம்!
பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸுப்ரீதா பவ ஸர்வதா!
ஓரடையும், உருகாத வெண்ணையும், நான் படைத்தேன்;
ஒருநாளும் என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.
என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்லவேண்டும்.
மஞ்சள் கயிறு மாற்ற வேண்டிய நேரம்:
மார்ச் 15, 2023 அன்று காலை 06.31 மணி முதல் 06.47 மணி வரைக்குள் நோன்பு சரடு கட்டிக் கொள்ளலாம் மற்றும் புது தாலி கயிற்றையும் மாற்றி கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…