மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம். மாசி மாதத்தின் போது நாம் செய்யும் எந்த நல்ல காரியத்திற்கும் இரட்டிப்பு பலன் உண்டு. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியது. இதையே 'மாசி மகம்' என்பார்கள். இத்தகைய மகத்தான நாளில் விரதம் இருந்தால், மறுபிறவி கிடையாது என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த மாசி மகம் உருவான கதையை தெரிந்துக்கொள்வோம். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்று மலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் புண்டரீக மகரிஷி, மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது.
ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார்.
ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த நாளே மாசி மகம். அதனால் தான், மாசி மகத்தன்று கடலில் நீராடுவது பெரும் புண்ணியம் என்று சொல்கிறார்கள்.
உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சணின் மகள் தாட்சாணியாக அவதரித்தார். இத்தகைய சிறப்பு மிக்க நாளே பெண்களுக்குரிய விரத நாளாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…