புண்ணியத் திருநாளாகக் கருதப்படும் மாசிமகம் பற்றி நீங்கள் அறியாத சில உண்மைகளைப் பற்றி இங்குக் காணலாம்.
கும்ப ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் தினம் பௌர்ணமி நாளாகும். இந்த கும்ப மாத பௌர்ணமி திருநாளே, மாசி மகம் எனப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் நவகன்னிகா நதிகளும், மகாமக தீர்த்தத்தில் சங்கமிப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரம்மாதி தேவர்களும் கும்பகோணத்தில் கூடுவதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், கும்பகோணமே உலக உயிர்களைக் காத்த தலம் என்று கூறப்படுகிறது. எனவே, இதனை உலக உயிர்களின் பிறப்பிடம் என்றே கருதுவர்.
பிரம்ம தேவர் பூஜித்து வந்த அமிர்தக் குடம், சிவனாரின் கணையால் உடைபட்டது. பின், அதிலிருந்து வழிந்தோடிய அமிர்தமானது இரண்டு இடங்களில் தேங்கியது. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், மற்றொன்று மகாமக தீர்த்தக் குளம் ஆகும். மகாமக குளத்தின் கரையில், பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திகேஸ்வரர், பரணேஸ்வரர், வ்யாஸேஸ்வரர், உமை பாகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தியேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர், என 16 ஈஸ்வர சந்திதிகளை, மகான் கோவிந்த தீட்சிதர் அமைத்தார்.
9 கிணறுகளையும், 20 தீர்த்தங்களையும் கொண்ட இந்த மகாமக தீர்த்தமானது, புண்ணிய நதிகளுக்கே புண்ணியம் தரும் சிறப்பைக் கொண்டது. மேலும், கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, காவிரி, கிருஷ்ணா, சரயு, துங்கபத்திரா போன்ற நதிகளின் பாவத்தை நீக்கிய திருக்குளமாக அமைகிறது. இந்த மகாமக தினத்தில் 9 நதிகளும் நீராடி மீண்டும் புண்ணிய நதிகளாகப் பொலிவு பெறுகிறது எனப் புராணத்தில் கூறப்படுகிறது.
எனவே தான் மாசி மகம் தினத்தன்று, இந்த மகாமக குளத்தில் நீராடுவோரின் தோஷங்கள், பாவங்கள், நோய்கள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமும், ஞானமும் பெறுவார்கள். குறிப்பாக ஒரு முறை மகாமகக் குளத்தில் நீராடினால், காசியில் நூற்றாண்டு காலம் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் எனக் கூறுவர்.
மகாமக குளத்திலன் தீர்த்தங்கள் சிறப்பானவை ஆகும். இதில், 20 தீர்த்தங்களையும், அதில் நீராட நாம் பெறும் புண்ணிய பலன்களையும் பற்றிக் காண்போம்.
✤ இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கக் கூடியது
✤ அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
✤ யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்
✤ நிருதி தீர்த்தம் - தீய சக்திகளின் பயங்கள் நீங்கும்
✤ வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி கிடைக்கும்
✤ வாயு தீர்த்தம் - நோய் விலகும்
✤ குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் பெருகும்
✤ ஈசான தீர்த்தம் - சிவபெருமான் அடியனாகச் சேர்க்கும்
✤ பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்
✤ கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்
✤ யமுனை தீர்த்தம் - வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும்
✤ நர்மதை தீர்த்தம் - உடலுக்கு வலிமை கிடைக்கும்
✤ கோதாவரி தீர்த்தம் - நாம் எண்ணிய விஷயங்கள் நடக்கும்
✤ காவிரி தீர்த்தம் - புத்திக் கூர்மையை மேம்படுத்தும்
✤ சரஸ்வதி தீர்த்தம் - அறிவு வளர்ச்சி உண்டாகும்
✤ குமரி தீர்த்தம் - ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும்
✤ சரயு தீர்த்தம் - மனக் கவலை தீரும்
✤ பயோஷ்னி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்
✤ அறுபத்தாறு கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் பெருகும்
✤ தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் விலகி, தேவேந்திர பதவி கிடைக்கும் எனக் கூறுவர்.
மாசி மகத்தைப் பற்றி நீங்கள் அறியாத சில உண்மைகள் இவையே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…