தமிழ் மாதத்தில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே "பங்குனி உத்திரம்". முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதாரம், சுவாமி ஐயப்பனின் அவதாரம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது இந்த பங்குனி உத்திர திருநாள். இந்த நாளில்தான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்று புராணங்கள் கூறுக்கின்றன. இத்தகைய சிறப்புகளை உடைய பங்குனி உத்திர திருநாளுக்கும் முருகப் பெருமானுக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!
தமிழ் கடவுளான முருகப் பெருமான் அசுரர்களின் கொட்டத்தை அடக்குவதற்காக தனது தாய், தந்தையரை வணங்கிவிட்டு பயணத்தை ஆரம்பித்த மாதமே பங்குனி. குதிரைகள் பூட்டிய தேரில் முருகப் பெருமான் செல்ல சாரதியாக வாயு பகவான் இருக்க, முருகப் பெருமானின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. இதென்ன திடீரென இப்படி வளருகிறது என்று காரணம் தெரியாமல் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார். இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும்.
அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும் இந்த மலைக்கு பக்கத்தில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்ற நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொல்கிறார். அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார்.
அதைக்கேட்ட வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. இதை தெரிந்துக்கொண்ட தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் ஏராளமான வீரர்கள் இறந்து போயினர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்க, இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தித் சாய்த்தான். மேலும், தாரகாசுரனை தடுக்கமுடியாமல் முருகனின் படைகள் சிதறி ஓட, மயக்கத்திலிருந்து எழுந்த வீரபாகு தனது மாய வேலைகளால் எலியாக மாறி கிர வுஞ்ச மலைக்குள் சென்றான்.
இதை பார்த்த மற்ற வீரர்களும் மலைக்குள் நுழைய, தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இந்த செய்தியை நாரதர் மூலம் அறிந்துக்கொண்ட முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வர, தாரகாசுரன் அவரை சிறுவன் என கிண்டல் செய்ய, இதனால் கோபமடைந்த முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். முருகப்பெருமானின் தாக்குதலை தாக்கமுடியாமல் தாரகாசுரன் எலியாக மாறி மலைக்கு நுழைந்துக்கொள்ள, முருகப்பெருமான் தனது வேலாயுதத்தை கையில் எடுத்து வீச, மலை சுக்குநூறாக உடைத் தெறிந்து தாரகாசுரனை கொன்றது. அதன்பிறகு முருகப்பெருமான் தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரநாளாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…