Sai Baba History in Tamil: கடந்த பதிவில், சாய்பாபா நிகழ்த்திய அதிசயத்தைப் பார்த்தோம். ஷீரடி மக்கள், எந்த தெய்வத்தைக் காண வேண்டி பாபாவிடம் அனுமதி பெற நினைத்தார்களோ? அதே வடிவத்தில் தோற்றமளித்து பாபா பக்தர்களின் மனதைக் குளிரச் செய்தார். அதன் படியே, பண்டரிபுரம் பண்டரிநாதராகவும், ஸ்ரீராமனாகவும் காட்சி தந்தார். இந்தப் பதிவில் சாய்பாபா நிகழ்த்திய மற்றொரு அதிசயத்தையும், ஆடம்பரத்திற்கு ஆசைப்படாது அவரின் வாழ்க்கையையும் பற்றி காண்போம்.
பக்தர்கள் பாபாவைப் பெருமைப்படுத்த முனைந்தனர். அதன் படி, கந்தல் கோணியில் அமர்ந்திருந்த சாய்பாபாவிற்கு வெள்ளிச் சிம்மாசனம் செய்து வைத்தார்கள். தலையில் அழுக்குத் துணியை முண்டாக போலக் கட்டி இருந்தவருக்கு வெள்ளிக்கிரீடம் செய்து வைத்து மகிழ்ந்தார்கள். அலங்காரப் பட்டு துணிகள், வெள்ளித் தடிகள், அலங்கார மஞ்சம், என எல்லாவற்றையும் செய்து கொண்டு வைத்து மகிழ்ந்தார்கள்.
ஆனால், சாய்பாபாவோ ஆடம்பரத்தைச் சற்றும் உணராமல் தாமரை இலைத் தண்ணீராகவே வாழ்ந்து வந்தார். அறுசுவை உணவிற்கும், உப்பில்லாத கஞ்சிக்கும் வித்தியாசம் தெரியாதவராக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். பக்தர்கள், வித விதமான மலர்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள். மூன்று வேளையும் முறைப்படி பூஜை நடத்தினார்கள். ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர். முதலில் பாபா அவற்றை மறுத்தார். பிறகு அவர்களுடைய திருப்திக்காகவே அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
அளவில்லாத மகிழ்ச்சியுடன், சில பக்தர்கள் அவரை ஓர் அலங்காரப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லத் திட்டமிட்டார்கள். அதற்காகப் பல்லக்கையும் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால், பாபா அதில் ஏறக் கண்டிப்பாக மறுத்து விட்டார். அவர்கள் தயார் செய்து வந்த பல்லக்கு மசூதிக்கு வெளியிலேயே அலங்காரப் பொருளாக வைக்கப்பட்டு விட்டது.
அதில் இருந்த சில அலங்கார வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போய்விட்டன. இதனைக் கண்ட பக்தர்கள் பதறிப் போய், பாபாவிடம் வந்து முறையிட்டனர். இதற்கு பாபா,”பாவம்! யாரோ ஏழைகள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பல்லக்கையே கேட்டிருந்தால் எடுத்து கொடுத்திருப்பேன்” என்று கூறி பாபா சிரித்தார்.
இது போலவே சில பக்தர்கள், அலங்காரத் தேர் ஒன்றையும் செய்து கொண்டு வந்து வைத்தார்கள். அதில் ஒரு முறையாவது ஏறி சாய்பாபா வலம் வர வேண்டும் என மனம் உருகிப் பிரார்த்தனைச் செய்தார்கள். பாபா சிரித்துவிட்டு அவர்களுடைய திருப்திக்காக, “நான் ஒரு நாள் இதில் ஏறி வலம் வருவேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால், கடைசி வரையிலுமே சாய்பாபா அந்தத் தேரில் ஏறவே இல்லை!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…