தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நன்னாளே தைப்பூசம் திருநாளாகும். முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் இந்த தைப்பூச திருநாளில், பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து, விரதம் இருந்து, அலகு குத்தி வழிபடுவர். இந்த தினம், முருகப் பெருமானுக்கு சிறப்பான நாளாகக் கருதப்படுவதற்கு ஒரு அற்புத வரலாறு உள்ளது. இந்த தைப்பூச திருநாளில் முருகனின் அருளைப் பெறுவதற்கு ஆறுமுகனின் தலங்களில் திரளான பக்தர்கள் கூடுவர். இந்த அற்புத நன்னாளாம் தைப்பூசத் திருந்தாளைப் பற்றி நீங்கள் அறியாத சில உண்மைகளைப் பற்றி இதில் காணலாம்.
✤ தைப்பூசம் திருநாளானது, இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
✤ தை மாதத்தில் முழு நிலவு தெரியும் சமயத்தில் பூசம் நட்சத்திரமானது வரும் போது சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. இது தைப்பூசத் திருநாளின் முக்கிய நிகழ்வாகும்.
✤ தைப்பூசம் தினத்தில் முருகன் தலங்களில் முருகப்பெருமானின் வீதி உலா நடைபெறும். இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று முருகனை வழிபடுவர்.
✤ முருகப் பெருமான் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் விழா கொண்டாடப்படுகிறது.
✤ இரணியவர்மன் எனும் மன்னன், சிதம்பரத்திற்கு வருகை புரிந்து பல்வேறு அற்புத திருப்பணிகளைச் செய்தான். அதன் மூலம், ஒரு தைப்பூச திருநாளில் நடராஜப் பெருமானை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றான்.
✤ சிதம்பரத்தில் நடராஜர், உமா தேவியுடன் இணைந்து ஆனந்த நடனம் புரிந்தார். இவ்வாறு நடராஜர், உமா தேவியின் நடனத்தை தைப்பூசத் தினத்தன்று தான் தரிசனம் கொடுத்தார்.
✤ தைப்பூச தினத்தில், பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வணங்கச் சென்ற பக்தர்கள், வழி முழுவதும் முருகப் பெருமானை நினைத்து பாடிய படி வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த பாடல்கள், “காவடி சிந்து” என அழைக்கப்பட்டது.
✤ தேவர்களின் குருவாக விளங்கும் பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூச நட்சத்திரம் ஆகும். எனவே, தைப்பூசம் தினத்தன்று வழிபாடு செய்வது சிறந்த பலன்களைத் தரும்.
✤ முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு இருக்கும் விரதங்களில், சிறப்பான விரதமாக தைப்பூச விரதமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
✤ தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்துக் கொண்டு, தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகச் சிறப்பாக கருதுகிறார்கள்.
✤ தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சுவாமிக்கு தேனாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.
✤ தைப்பூசத் திருநாளில் முருகப் பெருமானின் வழிபாடு மட்டுமல்லாமல், சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிப்பதுடன் பிரியாத வரத்தையும் பெறலாம்.
✤ சூரனை அழிப்பதற்கு, பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து வேலாக மாற்றி, அந்த சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாளே தைப்பூசம் ஆகும். இந்த வேல் பிரம்ம வித்ய சொரூபமானது.
✤ தைப்பூச தினத்தில் தொட்டதெல்லாம் துவங்கும் என்ற பழமொழியும் உள்ளது.
✤ தைப்பூசம் திருநாள், முருகனுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு விழாவாகும். இந்த தினத்தில் தான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.
✤ இந்த நன்னாளில் குழந்தைகளுக்குக் காது குத்துதல், கல்வி கற்க தொடங்குதல், கிரகப் பிரவேசம் செய்தல் போன்றவை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
✤ தைப்பூச திருநாளில் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதப் பெருமாள் தன் தங்கையான சமயபுரத்தாள் அம்மனுக்கு சீர் வரிசைகளைக் கொடுப்பார். இதனைத் தொடர்ந்து, சமயபுரத்தில் 10 நாள்கள் திருவிழா மற்றும் அம்மன் புறப்பாடு சிறப்பாக நடைபெறும்.
✤ இந்த நன்னாளில் தான், உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும், உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்களில் கூறப்படுகிறது.
✤ இந்த திருநாளில், மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது, இந்நன்னாளில் மயிலாப்பூரில் பாம்பு கடித்து பூம்பாவை என்ற பெண் உயிரிழந்தார். இவரை, ஞானசம்பந்தர் அந்த பெண்ணின் அஸ்தி கலத்தில் இருந்து, அந்தப் பெண்ணை உயிருடன் எழுந்து வரும் படி பதிகம் பாடி உயிர்ப்பித்தார். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடந்த இந்நிகழ்வானது மயிலைப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவிலானது, மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கொடி மரம் அருகே உள்ளது.
✤ தைப்பூசத் தினத்தில், பழனி முருகனின் அபிஷேக ஆராதனையைத் தரிசிப்பதன் மூலம், நம்முடைய அனைத்து சகல பாவங்களும் விலகுவதுடன், சுபகாரியங்கள் நடத்தக் கூடிய நாளாக அமைகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…