எப்படி கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு வாய்ந்ததோ, அதே போல தை மாதத்தில் தைப்பூசம் திருநாளில் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எதனால் பக்தர்கள் காவடி எடுக்கின்றனர், குறிப்பாக ஏன் பழனிக்கு செல்கின்றனர் என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை பொறுத்த வரையில் எல்லாவற்றிற்கும் பின்பு பொருள் ஒன்று நிச்சயம் இருக்கும். அதே போல தான் இந்த தைப்பூசம் திருநாளில் பக்தர்கள் செய்யும் வேண்டுதலுக்கு பின் இருக்கும் அர்த்தம் என்ன என்று பாப்போம்.
சிவபெருமானின் தீவிர பக்தர்களும் ஒருவன் தான் இடும்பன். இவன் அசுரனாகப் பிறந்தாலும் இறைவன் மீது அதிக பக்திக் கொண்டவன். இவனின் கடும் தவத்தால் மனமகிழ்ந்த சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று இடும்பனிடம் கூறினார். அதற்கு அவன் "ஈசனே சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகனை அடியேனாக வாழ எனக்கு அருள் தாருங்கள்" என்று கேட்டுள்ளான். அவன் கேட்ட வரத்தை தந்து விடுகிறார் எம்பெருமான்.
முக்கண் சிவபெருமானின் ஆசியைப் பெற்ற குறுமுனியான அகத்தியர், கைலாய மலையில் இருந்து இரண்டு சிகரங்களை சிவமாகவும், சக்தியாகவும் போற்றி அதற்கு சிவகிரி-சக்திகிரி என்று பெயரிட்டு வழிபட்டார். பிறகு அந்த இரண்டு மலைகளை தன்னுடைய இறப்பிடத்திற்கு கொண்டு வந்து வழிபட விரும்பினார். அதற்கு முருகனை மனதார பிராத்தனை செய்து மலைகளை எடுத்துக்கொண்டு கேதாரம் என்னும் இடம் வரையில் நடந்து வந்தார். சிறிது நேரம் ஒய்வு எடுக்க அமரும் போது அந்த வழியாக வந்த இடும்பன் மற்றும் அவனின் மனைவி இடும்பி ஆதியரைப் பார்த்து வணங்கினர்.
பின்னர் அவருக்கு உதவி செய்ய விரும்பிய இடும்பன் இந்த மலைகளை நான் தூக்கிக்கொண்டு வரவா என்று கேட்டான். அகத்தியர் சம்மதம் தெரிவித்த பின்னர் இடும்பன் சிவகிரி மற்றும் சக்திகிரியை தூக்க முயற்சிதான் ஆனால் முடியவில்லை. பின்னர் அகத்தியரிடம் வணங்கி மலையை தூக்கும் சக்தியை அளிக்குமாறு கேட்டுக்கொண்டான். உடனே அவரும் முருகப்பெருமானை மூலமந்திரத்தையும், வழிபடும் முறையையும் கற்றுக்கொடுத்தார்.
அகத்தியர் சொன்ன மந்திரத்தை மனதில் ஜபித்துக்கொண்டிருக்கும் போது எட்டு நாகங்கள் கயிறுகளாலாக மாறி காவடி தோற்றத்தில் இருந்தது. இடும்பன் அந்த காவடியை எடுத்துக் கொண்டு முருகனின் மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு முன்னேறினான். அப்படியே சென்றுக் கொண்டிருக்கும் போது சிறிது நேரம் இளைப்பாறிட திரு ஆவினன்குடி என்னும் இடத்தில் காவடியை இறக்கி விட்டு ஓய்வு எடுத்தான். பின்னர் மீண்டும் காவடியை தூக்க முயற்சிக்கும் போது அவனால் தூக்க முடியவில்லை.
அந்த இடத்தில் முருகப்பெருமான் குழந்தை தோற்றத்தில் அவதரித்து இடும்பனைப் பார்த்து நகைத்து சிரித்துக்கொண்டிருந்தார். அதில் கோபமடைந்த இடும்பன் சிறு குழந்தையிடம் சண்டையிட்டு தோல்வியுற்றான். மீண்டும் முயற்சிக்கும் போது கீழே விழுந்து மயங்கினான். தன்னுடைய கணவனின் உயிரை காப்பாற்றி மாங்கல்ய பிச்சை போடுங்கள் பிரபுவே என்று இடும்பி கேட்டுக்கொள்ள, தன்னுடைய கடைக்கண்ணால் இடும்பனை மீண்டும் எழவைத்தார் முருகன்.
முருகன் இடும்பனை நோக்கி, "இடும்பா, இந்த மலைகள் எனக்குரியவை நீ காவடி போல தூக்கி வந்த இந்த மலைகள் இங்கேயே இருக்கட்டும். யாம் இந்த இடத்தில் எழுந்தருளி அருள் வழங்குவேன். நீ இந்த அடிவாரத்தில் காவலனாக இருப்பாய். எப்படி நீ காவடி போல சிவகிரி-சக்திகிரி மலைகளை தூக்கி வந்தாயோ , அதே போல என்னை நாடி வரும் பக்தர்கள் தங்களுடைய காணிக்கைகளை கவடையாக தூக்கி வந்து தங்களின் கவலைகளை போக்கிக்கொள்வார்கள். அவை அனைத்துமே உன்னால் தான். மேலும் என்னை பார்க்க வருவதற்கு முன்னர் உன்னை வணங்கி விட்டு தான் மலை ஏறுவார்கள்" என்று அருள் புரிந்தார்.
தைப்பூசம் திருநாளில் தமிழகத்தில் மட்டும் அல்லாது முருகன் கோவில் இருக்கும் அனைத்து இடத்திலும் விஷேச பூஜை, புனஸ்கரங்கள், பக்தர்கள் வேண்டுதல் என்று நிறைய உள்ளது.
அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய அல்லது பெரிய வேலை குத்திக்கொண்டு கோவிலுக்கு செல்வார்கள். ஒரு சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
சர்பக் காவடி - பக்தர்கள் சர்பத்தை காவடியில் கட்டிக்கொண்டு கால்நடையாக கோவிலுக்கு எடுத்துச் செல்வார்கள்.
தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி - பக்தர்கள் பால்குடத்தை காவடியாக எடுத்துக்கொண்டு கால்நடையாக செல்வார்கள்.
மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்கள் கால்நடையாக கொண்டு செல்வதுண்டு.
மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் தங்கள் தோலில் எடுத்துக்கொண்டு கால்நடையாக செல்வார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…