நம்மில் பலரும் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்து குழம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இருவரும் ஒன்று கிடையாது. தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு. பெரும்பாலானோர் கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்கு பதிலாக தட்சிணாமூர்த்தியை வணங்கி, பரிகார பூஜைகளை செய்து வருகின்றனர். குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற வஸ்திரத்தை தட்சணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், குருகிரக நைவேத்தியப் பொருட்களாக கொண்டை கடலை மாலை, கொண்டை கடலை சாதம் போன்றவற்றை தட்சிணா மூர்த்திக்கு நிவேதனம் செய்கிறார்கள்.
குறிப்பாக, குருப்பெயர்ச்சி நாளில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்துவருகின்றனர். அதேநேரத்தில் உண்மையில் குரு பகவானை யாரும் வழிபாடு செய்வதே கிடையாது. இவை அனைத்தும் தவறான ஒன்றாகும். எனவே, குரு பகவான் என்பவர் யார்? தட்சிணாமூர்த்தி என்பவர் யார்? என்பதை அறிந்துக் கொண்டு அவர்களுக்கு உரியனவற்றை செய்வதே சாலச்சிறந்தது.
தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ பெருமானின் ரூபம். சிவ ஆலயங்களில் தெற்கு திசையை பார்த்தவாறு அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். 64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. மேலும், இவர் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர். ஸ்நகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவர் வெண்பட்டு உடுத்தி இருப்பார். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார். ஆகவே, தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக மட்டுமே (சிவகுருவாக) வழிபடுங்கள்.
தட்சிணாமூர்த்தி வழிபடும் முறை:
ஞானத்தின் வடிவமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியை தியானத்தில் அமர்ந்து வழிபட்டாலே போதுமானது. அறிவும், தெளிவும், ஞானமும் பிறக்கும். இவரை வழிபாடு செய்வதற்கு எந்த கிழமையும் தேவையில்லை.
குரு பகவான் என்பவர் 9 கிரகங்களில் ஒருவரான கிரக வடிவம். இந்திர லோகத்தில் தேவர்களுக்கெல்லாம் குருவாக, ஆலோசனை வழங்கக் கூடியவராக ஆசிரியர் பணியை செய்பவராக இருப்பதால் இவர் 'தேவ குரு' (ப்ருஹஸ்பதி) என்று அழைக்கப்படுகிறார். இவர் நவகிரங்களில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிப்பவர். குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதேப்போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை. இவரை வியாழக்கிழமைகளில் நவக்கிரக சன்னதியில் வழிபாடு செய்து வாழ்க்கையில் ஏராளாமான பலங்களையும் புண்ணியங்களையும் பெறுங்கள்.
குரு பகவானை வீட்டில் வழிபட நினைப்பவர்கள் வியாழன் கிழமை அன்று குருபகவான் படத்திற்கு சந்தனம், குங்குமமிட்டு கொண்டைக் கடலை மாலை அணிவித்துக் கொள்ளுங்கள். அவற்றை தானமாக கொடுக்கவும் நெய்வேத்தியம் வையுங்கள். பின்னர், பெரிய மண் அகல் விளக்கு ஒன்றை வைத்து, அதில் 16 திரி இட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு முறையாக செய்ய திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் கைகூடி வரும். குரு பகவான் கொடுக்கும் அத்தனை பலன்களும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…