தமிழ் கடவுளான முருகப் பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் அற்புத நாளே 'தைப்பூசம்' என்கிறோம். இந்த நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன.
தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் பால் குடங்கள், பல விதமான காவடி, தேரோட்டம் ஆகியன நடத்தப்படுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் வேல் குத்தியும், காவடி தூக்கியும் முருகனை வழிபாடு செய்வார்கள்.
முருகப் பெருமானுக்கு உரிய முக்கியமான விரத நாட்களில் வைகாசி மாதத்தில் வரும் விசாகம், பங்குனியில் வரும் உத்திரம், தை மாதத்தில் வரும் பூசம், கிருத்திகை ஆகியவை மிகவும் விசேஷமானவை. அதாவது, வைகாசி விசாகம் என்பது முருகன் பிறந்த தினம். பங்குனி உத்திரம் என்பது முருகன் தெய்வாணையை மணம் முடித்த நாள். கிருத்திகை ஆறுமுகம் படைத்த உருவத்தை சக்தி ஒரே உருவமாக இணைத்த தினம். தைப்பூசம் என்பது பார்வதியிடம் இருந்து முருகன் வேலை பெற்ற தினம். இப்படி ஒவ்வொரு நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு.
தைப்பூச நாளில் தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தார். பார்வதி தேவி, சூரபத்மன் என்ற அரக்கனை தோற்கடிக்க முருகப்பெருமானுக்கு வேல் (தெய்வீக ஈட்டி) கொடுத்தார். தாயின் கையில் இருந்து வேலை வாங்கி முதன்முறையாக வேல் ஏந்திய நாளும் இதுதான். அதுமட்டுமல்லாமல், இந்த தைப்பூச நாளில் தான் சிதம்பரம் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி பிரம்மா, பதஞ்சலி, வியாக்ரபாதர், விஷ்ணு ஆகியோருக்கு காட்சி கொடுத்தார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளான தைப்பூசம் இந்த வருடம் பிப்ரவரி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பிப்ரவரி 04 ம் தேதி இரவு 10.41 மணி துவங்கி பிப்ரவரி 06 ம் தேதி அதிகாலை 12.48 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதே போல் பிப்ரவரி 04 ஆம் தேதி (தை 21) காலை 09.16 மணிக்கு துவங்கி பிப்ரவரி 05 ஆம் தேதி (தை 22) பகல் 12.13 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது.அதனால் பிப்ரவாரி 5ஆம் தேதிதான் நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் இருக்கிறது என்பதால் அன்று தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…