சென்னை: பாலிவுட்டுக்கு என்னை பார்த்தால் பயம் இருக்கிறதென்று இசைஞானி இளையராஜா தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வாய்க்கால் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.
அன்னகிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கு இசையமைத்தார். அந்த ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி. தொடர்ந்து இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவ சமீபத்தில்தான் 80ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதேபோல் அவரது இசை எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்தது உண்டு. அவற்றில் சமீபத்தில் மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்இளையராஜா பேசுகையில், ”என்னைப் பற்றி பாலிவுட்டில் இருப்பவர்களுக்கு பயம் இருக்கிறது. இவரை நம்மால் நெருங்க முடியவில்லையே என்கிற அகம் அவர்களுக்கு. அதனால், நிறைய கட்டுக்கதைகளைப் பரப்பி விட்டார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களை நான் ‘இம்ப்ரஸ்’ செய்ய எதுவும் இல்லை” என்றார்.
மேலும் தனக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவி குறித்து அவர் பேசுகையில், என்னையும் எனது இசை வாழ்க்கையையும் மத்திய அரசு மதித்திருப்பதன் அடையாளமே எம்.பி.பதவி. ‘நான் கட்சியில் சேர்ந்துவிட்டேன்’ என்று அதைத் தவறாகப் பரப்புரை செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘ராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவன்’ என்பது எனது இசை ரசிகர்களுக்கு தெரியும்.
மனதால் குறுகிப் போன, இறுகிப் போனவர்கள் என் மீது குறை காண்பது அவர்களுடைய பார்வையின் கோளாறு. என் மீது குறை காண்பவர்களால் ஒருபோதும் என்னை மாற்ற முடியாது. அப்படிப்பட்டவர்கள்தான் என் மீது பந்தை அடிக்கிறார்கள். எத்தனை முறை வீசினாலும் நான் பந்தைத் தொடுவதில்லை. ஏனென்றால் நான் ‘மேட்ச்’ ஆடுபவன் அல்ல” என்றார். அவரது இந்தப் பேட்டி இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…