எந்த ஒரு பண்டிகை வந்தாலும், வீடு தோறும் மணமணக்கும் பலகாரங்கள் வாசனை மணக்கும். ஏன் பண்டிகை காலத்தில் மட்டும் தான் ஸ்வீட், காரம் செய்ய வேண்டுமா என்ன? சாதாரணமான நாள்களிலும் செய்யலாம். பண்டிகைக் காலத்தில் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால், வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து, அவர்களுக்கு அன்புடன் பலகாரம் செய்து கொடுத்து மகிழ்வர். இதனாலேயே பண்டிகைக் காலங்கள் என்றாலே பலகாரத்திற்கு ஒரு தனி மௌசு உண்டு. அப்படி ஒரு தனிச்சுவையில், எல்லோருக்கும் மிகவும் பிடித்த பலகாரமான அச்சு முறுக்கு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக முறுக்கு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அச்சு முறுக்கு சுவையானது நாவில் எச்சில் ஊறும் திண்பண்ட வகைகளில் ஒன்று. அந்த அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும். இதில், அச்சு முறுக்கு செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பச்சரிசி – 1 கப்
சர்க்கரை பவுடர் – ¼ கப்
ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்
கறுப்பு எள் – ½ டீஸ்பூன்
தேங்காய் பால் – ¼ கப்
எண்ணெய் – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு
உப்பு – 1 சிட்டிகை
✤ முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு அதில் நீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ பிறகு, நீரினை வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் போட்டு ஈரப்பதம் நீங்குமாறு உலர்த்த வேண்டும்.
✤ சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு சர்க்கரை பவுடராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதன் பிறகு, தேங்காயைச் சேர்த்து தேங்காய் பால் எடுத்து கிண்ணத்தில் வடிகட்டி அதனை ஒரு கிளாஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ பின், அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நைசான மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதன் பின் அரைத்த மாவினை சல்லடையில் போட்டு ஒரு பெரிய தட்டில் சலித்துக் கொள்ளவும்.
✤ ஒரு அகன்ற பாத்திரத்தில் சலித்த மாவைச் சேர்த்து, அதனுடன் எடுத்து வைத்த தேங்காய் பால், எள், ஏலக்காய் பொடி, சர்க்கரை பவுடர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
✤ அதன் பின், மாவின் பதமானது கெட்டியாகவோ அல்லது அதிக ஈரப்பதம் கொண்டும் இல்லாமல் சற்று மிதமாக இருக்க வேண்டும்.
✤ பிறகு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். இதனுடன், முறுக்கு அச்சினையும் சேர்த்து நன்கு காய வைக்கவும்.
✤ அச்சு காய்ந்த உடன், மாவினுள், ½ பகுதி வரை டிப் செய்து, உடனே காயும் எண்ணெயில் வைத்து விட வேண்டும்.
✤ அச்சினை லேசாக ஆட்டிய உடனே முறுக்கு தனியாக எண்ணெயின் வந்து விடும். குறிப்பாக, தீயை சிம்மில் வைத்து, முறுக்கினை திருப்பி விட்டு, ஒரு நிமிடத்தில் எடுத்து விட வேண்டும்.
✤ இதில், எண்ணெயிலிருந்து வெளியே எடுத்த உடன் முறுக்கு மென்மையாக இருக்கும். சிறிது ஆறிய பின்பே மொறு மொறுவென இருக்கும். இவ்வாறே அச்சு முறுக்கு தயார் செய்யப்படுகிறது.
இது போல சுவையான அச்சு முறுக்கை உங்கள் வீட்டில் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…