குழந்தைகள் என்றாலே வெகுளியாக தான் இருப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளிடம் ஏதாவது பொருட்களை கொடுக்கும் போது கவனத்தோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அது உணவு பொருளாக இருந்தாலும் கூட. ஏனென்றால், குழந்தைகளுக்கு உணவு பொருட்களை சாப்பிடும்போது ஆர்வம் அதிகம் இருக்கும். இதனால், அதை நன்றாக மெல்லாமலும், அவசர அவசரமாகவும் விழுங்கிவிடுவார்கள். இதனால், விழுங்கப்படும் பொருள் மூச்சுக்குழாய் அல்லது உணவு குழாய்க்குள் சென்றுவிடும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக் கொள்வதுமுண்டு. சில சமயங்களில் இது குழந்தையின் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, காசு, ரப்பர், கோலிக்குண்டு, பாசி, ஹேர்பின், நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி, சாக்லேட் போன்றவற்றை குழந்தைகள் விழுங்கிவிட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்க குழந்தை எதிர்பாராதவிதமாக எதையாவது விழுங்கிவிட்டால்,
முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், குழந்தையை குனியவைத்து, முதுகுப் பகுதியில் 5 முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்பவும் விழுங்கிய பொருள் வெளியில் வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து, குழந்தையின் நெஞ்சுக்கு கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகையின் முட்டி மேல் இன்னொரு கையை வைத்து 5 முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும்.
1 வயசுக்கும் குறைவான குழந்தைக்கு..
ஒரு வயதிற்கும் குறைவான குழந்தையாக இருந்தால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில், நம் கையிலோ, தொடையிலோ குழந்தையை குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் 5 முறை தட்ட வேண்டும்.
அப்பவும் பொருள் வெளியில் வரவில்லையென்றால், குழந்தையை அதேநிலையில் மல்லாக்கப் படுக்க வைத்து நெஞ்சுக்கு கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
1 - 12 வயது குழந்தைக்கு..
உங்க குழந்தைக்கு 1 முதல் 12 வயதாக இருந்தால், பொருளை விழுங்கி பேச்சு மூச்சு இல்லாத நிலையில், இதய முச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளை செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நமது கையைவைத்து நிமிஷத்திற்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இப்படி 30 முறை செய்ய வேண்டும். அதன்பின்னர், குழந்தையின் மூக்குபகுதியில் காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று பார்க்க வேண்டும். வரவில்லையென்றால், குழந்தையின் வாயில் வாய்வைத்து 2முறை ஊத வேண்டும்.
அப்படியும் குழந்தைக்கும் மூச்சுவரவில்லை என்றால், மீண்டும் நெஞ்சுப்பகுதியில் 5 முறை கையை வைத்து அழுத்த வேண்டும். மறுபடியும் 2 முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்யலாம்.
குறிப்பு: இந்த முதலுதவிகள் மருத்துவ உதவி கிடைக்க தமாதமாகும் போது மட்டுமே. எக்காரணத்திற்கும் இதை மட்டும் நம்பி குழந்தையின் உயிரில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதையாவது குழந்தை விழுங்கிவிட்டால், முடிந்தவரை அடுத்த 5 நிமிடத்தில் மருத்துமனைக்கு கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பொருள் வெளியே வந்தாலும், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால், பொருளின் ஒரு பகுதி விடுபட்டிருக்கலாம் அல்லது காயம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதை செய்யவே கூடாது..
குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால், சிலர் குழந்தையை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது முற்றிலும் தவறு. அப்படிச் செய்ய கூடாது.
இந்தமாதிரியான நேரத்தில் தண்ணீர் குடிக்க வைப்பதோ, ஏதாவது சாப்பிடக் கொடுப்பதோ கூடாது.
மூக்குவழியாக பொருள் சென்றுவிட்டால்..
சில குழந்தைகளுக்கு வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்கின் வழியாகவும் சில பொருட்கள் சென்றுவிடுவதுண்டு. இவற்றால், உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கியில் ரத்தம் வழிந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.
எனவே, குழந்தையின் அனைத்து நடவடிக்கைகளையும் எப்போதும் கவனத்துக்கொண்டே இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், மெதுவாக சாப்பிடவும், நன்றாக மென்று சாப்பிடவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எந்த பொருட்களையும் வாயில் போட்டு விளையாடக் கூடாது என்றும் சொல்லிக்கொடுத்து வளர்ப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…