வீட்டில் காமாட்சி அம்மனை வழிபட்டு, காமாட்சி அம்மன் விளக்கேற்றி வேண்டுவோர்க்கு தீராத பிரச்சனைகளும் விலகி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அவை மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்த வழிபாடு முறைகளின் மூலமாக, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நாள்தோறும், காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது, ஒரு சில வழிமுறைகளைக் கையாள்வது அவசியம் ஆகும்.
காமாட்சி அம்மனை “குலம் காக்கும் தெய்வம்” என்றே கருதுவர். வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் செல்வச்செழிப்புடன் வாழ்வதற்கு, தவத்தை மேற்கொண்டு காமாட்சி அம்மனை வேண்டிக் கொள்வர். இதற்கு ஒரு புராணக்கதையே உள்ளது. உலகம் செழிப்புடன் இருக்க காமாட்சி அம்மனே தவத்தை மேற்கொண்டதாக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
இந்த தவம் மேற்கொள்ளும் சமயத்தில் மற்ற தெய்வங்கள் காமாட்சி அம்மனிடம் வந்து சேர்ந்து தவம் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, அனைத்து தெய்வங்களின் ஆசி பெற, வீட்டில் தினந்தோறும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள், தங்களது குலத்தைக் காக்கும் பொறுப்பை அம்மனிடம் ஒப்படைத்து விட வேண்டும். எனவே, காமாட்சி அம்மனை வேண்டி விளக்கு ஏற்றுவோர் “என் குலத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்னுடையது” என நினைத்து தீபம் ஏற்றினால் குலம் தழைத்தோங்கும்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட காமாட்சி அம்மன் விளக்கில், கஜலட்சுமி அம்மனின் படம் பதிக்கப்பட்டிருக்கும். இதன் இருபுறங்களிலுமே யானை இருக்கும். இப்படியாக வீடுகளில் விளக்கை ஏற்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வது அவசியம் ஆகும். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது சிறிய சிறிய தவறுகளை நாம் செய்து வருகிறோம். அதனைப் பற்றி இதில் காண்போம்.
காமாட்சி அம்மனுக்கு விளக்கு ஏற்றும் போது, கட்டாயம் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வீட்டில் லட்சுமி கடாக்ஷம் பெருகி, செல்வச் செழிப்புடன் வாழ இந்த முறைகளைப் பின்பற்றலாம்.
காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது, அதனை ஒரு சிறிய தாம்பூலத்தின் மேல் வைத்து தான் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் தாம்பூலமானது விளக்கின் அடிப்பாகத்தை விட பெரியதாக இருக்க வேண்டும்.
அதே போல, விளக்கை எடுத்து தாம்பூலத்தின் மீது வைத்தால் அது நன்றாகப் படிந்து இருக்குமாறு வைக்க வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், காமாட்சி விளக்கின் அடிப்பாகத்தை விட, சிறிய தட்டில் வைத்து ஏற்றக் கூடாது.
தட்டின் மேல் இருந்த காமாட்சி அம்மன் விளக்கு ஆடாமல் அசையாமல் இருக்குமாறு நன்றாக அமர்ந்திருக்க வேண்டும்.
காமாட்சி அம்மன் விளக்கின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் பொட்டு வைக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும் இடத்தில் மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அது தீயில் கருகக் கூடாது. எனவே, மஞ்சள், குங்குமத்தை தீபச்சுடர் ஏற்றும் இடத்திற்கு சற்று தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல, தினந்தோறும் ஒரே திரியை வைத்து காமாட்சியம்மன் விளக்கை ஏற்றக் கூடாது. தினந்தோறும் புதிதாக மாற்றி காமாட்சி விளக்கை ஏற்ற வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் குங்குமப் பொட்டின் எண்ணிக்கையும் கட்டாயம் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும். மேலும், யானை முகத்திற்கும் குங்குமப் பொட்டு அவசியம் வைக்க வேண்டும்.
காமாட்சி அம்மன் விளக்கு வைக்கக் கூடிய சிறிய தாம்பூலத் தட்டில் கண்டிப்பாக 5 பொட்டுகள் வைப்பது அவசியம்.
இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சிறிய தாம்பூலத்தில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுக் கொள்ளலாம். இதில் சிங்கமுகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.
இந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள், ஒரு சிட்டிகை அளவு குங்குமம் போன்றவற்றைக் கரைத்து சிறிதளவு உதிரிப் பூவைத் தூவிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னரே, காமாட்சி அம்மன் விளக்கினை தட்டின் மேல் வைத்து தீபம் ஏற்றிக் கொள்ளலாம்.
வெறும் தாம்பாலத்தில் மீது தீபம் ஏற்றுவதை விட, அதன் மேலே குறிப்பிட்ட பொருள்களைக் கொண்டு தீபம் ஏற்றுவது நன்மையைத் தரும்.
விளக்கேற்றும் போது, முதலில் விளக்கில் எண்ணெய்யை ஊற்றி பின்பு தான் திரியை போட வேண்டும். அதன் பிறகே விளக்கை எரிய வைக்கலாம்.
குறிப்பாக, தீபம் எரியும் போது அதிகமாக பந்தம் எரிவது போல எரியக் கூடாது.
காமாட்சி அம்மன் விளக்கை இந்த வழிமுறைகளின் படி ஏற்றினால், எந்த கஷ்டங்களும் நம்மை அண்டாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…