திருவீழிமிழலையில் உள்ள வீழிநாதர் கோவில் திருமண பாக்கியம் அருளும் சிறப்பு மிக்க கோவிலாகும். திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் உள்ள இக்கோவில் சிவாலயங்களில் முக்கிய கோவிலாக உள்ளது.
சோழவள நாட்டின் காவிரி நதியின் தென்கரையில் இருக்கக் கூடிய தேவார பாடல் பெற்ற 61 ஆவது தலமாக இத்தலம் உள்ளது. இந்த கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
திருவீழிநாதர் கோவிலின் வடக்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி அம்மனுக்கென தனி கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் கிழக்கு முன் நுழைவுவாயில் ஆனது கோபுரம் இல்லாத அமைப்பைப் பெற்றுள்ளது. இந்த வாயிலைக் கடந்து செல்லும் போது அதன் வடபுறத்தில் வவ்வால் நெத்தி மண்டபம் என்ற திருக்கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபமானது வவ்வால் நத்தா மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதற்கு வவ்வால் வந்து தங்க முடியாத மண்டபம் என்பது பொருளாகும்.
இந்தக் கோவிலின் முதல் கோபுர வாசல் ஆனது, 80 அடி உயரத்தைக் கொண்டு திகழ்கிறது. மேலும், இது 3 தலங்களையும், 5 கலசங்களையும் கொண்டு விளங்குகிறது. இந்த ராஜகோபுர வாசலைக் கடந்து உள்ளே செல்லும் போது பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி, திருமூலநாதர் கோவில் போன்றவை உள்ளன.
அதன் நடுபிரகாரத்தின் மேற்கு பகுதியில் படிக்காசு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இதன் பின்புறத்தில் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இதன் உட்பிரகாரத்தில் உள்ள மாடக்கோவில் அமைப்பில் வீழிநாதர் உயரமாகத் திகழ்வதைக் காணலாம். இதுவே, விண்ணிழி விமானம் எனப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள உமையவள் குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம். இதற்கு தனி ஒரு காரணமே உள்ளது. சிறந்த சிவ பக்தராக விளங்கும் காத்தியாயன முனிவர், தனது மனைவியுடன் இந்த ஆலயத்துக்கு வந்துள்ளார். தலத்தில் வீற்றிருக்கும் ஈசன் மற்றும் அம்பிகையை வணங்கி குழந்தை பாக்கியம் இல்லாததால், அருந்தவம் புரிந்தார்.
அப்போது, அங்கு உமையவளே, அன்னபூரணியாகக் காட்சி அளித்து முனிவரே! தாங்கள் விரும்பிய வரத்தைக் கேட்கலாம் எனக் கூறினார். அதற்கு முனிவரும், தாயே.. நீயே எனக்கு மகளாக வரவேண்டும் எனக் கூறினார். இதனால், உமையவள் குழந்தை வரம் தருபவராக காட்சி தருகிறார்.
திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் சித்திரை திருக்கல்யாணம், வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம் என ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்
இந்த கோவில் ஆனது, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். மேலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். இவ்வாறு தினந்தோறும் 6 கால பூஜைகள் சிறப்பாக இந்த கோவிலில் நடைபெறுகிறது.
வீழிநாதர் கோவிலுக்கு எப்படி செல்லலாம்?
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பேருந்து அல்லது இரயில் மூலம் கும்பகோணம் வந்தடைந்து, பின் அங்கிருந்து நாச்சியார் கோவிலுக்குச் செல்லலாம். நாச்சியார் கோவிலில் இருந்து, எரவாஞ்சேரி செல்லக்கூடிய வழித்தடத்தில் திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் அமைந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…