மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் மகர ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சனிபகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசியினரே! ஜென்ம சனியால் கடந்த சில காலமாகவே படாதுபாடுபட்டிருப்பீர்கள். ஆனால், நடந்த முடிந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு ஜென்ம சனி முழுவதுமாக விலகி, நல்ல காலம் பிறந்துவிட்டது. இதனால், பணியிடத்தில் இருந்தவந்த சஞ்சலங்கள் அனைத்தும் விலகப் பெறுவீர்கள். தடைப்பட்டு நின்ற முக்கிய காரியங்கள் விரைவில் நடந்து முடியும். சிலருக்கு கல்வி, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, மனதில் புது தெம்பும், தைரியமும் பிறக்கும்.
இந்த மாதத்தில் உங்க பூர்வ புண்ணிய அதிபதியான சுக்கிர பகவான் உச்சம்பெற்று இருப்பதால், தொழிலில் இருந்துவந்த இழுபறிகள், நஷ்டம் அனைத்தும் விலகி லாபம் பெருகும். குறிப்பாக, விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு அற்புதமான காலக்கட்டம். குடும்பத்தில் மூத்த சகோதர, சகோதரிகளால் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் தீர்ந்து, ஒற்றுமையான சூழல் ஏற்படும். சிலர் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு. 6ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
இருப்பினும், காதலர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். துணையுடன் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவேண்டும். இல்லையென்றால் பிரியவேண்டிய சூழல் ஏற்படும். அரசாங்கம் வழியில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். அதனால், அரசு அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. வீடு மாற்றம் செய்வதை தவிர்க்கவும். சுயதொழில் செய்வோருக்கு வாய்ப்புகள் கைநழுவி போகலாம், கவனமாக இருக்க வேண்டும்.
வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. மாதத்தின் இறுதியில் இளைய சகோதர, சகோதரிகளால் தேவையற்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
வணங்க வேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
சந்திராஷ்டம நாள்: மாசி 21 ஆம் தேதி இரவு 10.55 மணி முதல் மாசி 24 ஆம் தேதி காலை 09.11 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…