இந்தியர் என்ற உணர்வுடன், நம் அனைவரும் ஒன்றுபட்டு கொண்டாடுவது சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம். இந்த இரு தினங்களுக்கும் என்ன வித்தியாசம் மற்றும் இந்த தினங்களை ஏன் கொண்டாடுகிறோம் என்பது குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். அவற்றைப் பற்றி இதில் காண்போம்.
நம் நாடு ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்தது என்பது அனைவரும் அறிந்தது. இந்த சுதந்திரம் என்ற சொல்லை சொல்லும் போதே, யாரிடமிருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது. நம் நாட்டு மக்களை பல ஆண்டுகளாக அடிமைப்படுத்து, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, கடினமான சூழலை உருவாக்கிய காலம் அது. அந்த கஷ்டமான இருளறையில் இருந்து நீக்கி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. நம் நாட்டு மக்களின் உரிமைகளைக் காத்து, ஆங்கிலேயரிடம் இருந்து மீட்பதற்கு போராட்டக்காரர்கள் செய்த தியாகங்கள் ஒன்றா? இரண்டா? நிறைய இன்னல்களை அனுபவித்தனர்.
இன்னுயிரையும் பொருட்படுத்தாது, ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று, போராடி நம் அடிமை தேசத்தை சுதந்திர நாடாக மாற்றினார்கள். இதனை நினைவு கூறும் விதமாகவே, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள், சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், நமக்கு அந்த சமயத்தில் கிடைத்த சுதந்திரம் முழுமையான சுதந்திரம் அல்ல. ஏனென்றால், நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷின் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நம் நாட்டின் தலைவராக இருந்தார். இதனை மாற்றுவதற்கே, இந்திய அரசியலமைப்பு 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த நாள் முதலே இந்தியாவில் மக்களாட்சி கொண்டுவரப்பட்டு மலரத் தொடங்கியது. இந்த நிலையிலேயே, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் பதிவி நீக்கப்பட்டார். மக்களாட்சியின் அடிப்படையில், புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது. இந்த குடியரசி என்பதன் நேரடி பொருள் மக்களாட்சி என்று கூறுவர். அதாவது, மன்னர்களின் ஆட்சி இல்லாமல், மக்களே ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை தொடங்கியது. இதுவே, குடியரசு எனப் பெயர் பெற்றது.
இவ்வாறு மக்களே மக்களால் தங்களுக்காக ஆட்சியாளர்களை அமைப்பதால், இது குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் குடியரசுத் தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நம் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறையே பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இதுவே, சுதந்திர தினத்திற்கும், குடியரசுத் தினத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஆகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…