மண்ணுலகில் மறைந்து விண்ணுலகிற்குச் சென்றிருப்பினும், எட்டுத் திக்கும் இவரது புகழ் பரவிக் கொண்டிருக்கிறது. உலகம் போற்றும் விஞ்ஞானி. இந்திய ஏவுகணை நாயகன், சிறந்த நூலாசிரியர், அற்புதமான பேச்சாளர், எல்லோராலும் விரும்பப்படும் எளிய மனிதர், இன்னும் பல சிறப்புகளைக் கொண்டவர். இத்தகைய பல்வேறு சிறப்புக்கு உரியவராக விளங்குபவரே ஏ.பி.ஜே அப்துல்கலாம். இவரின் சிறப்புகளும், சாதனைகளும் தெரிந்திருப்பினும் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அனைவரும் அறிய வேண்டும். இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவராக விளங்கும் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இதில் காண்போம்.
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்திருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மாள் ஆவார். இவர்களுக்கு 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அன்று பிறந்தார் கலாம். இவர் தனது பள்ளிப்படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆரம்பித்தார். குடும்ப ஏழ்மை காரணமாக, படிக்கும் காலத்திலேயே வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மீதி நேரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள “செயின்ட் ஜோசப்” கல்லூரியில் இயற்பியல் பாடத்தைப் பயின்றார். அதனைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லாமல், அடுத்த ஆண்டான 1955-ல் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பைத் தொடங்கினார். அதன் படி, சென்னையில் உள்ள எம்.ஐ.டி-ல் விண்வெளி பொறியியல் படிப்பை பயின்ற இவர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பின்னர், 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த சமயத்தில், இந்திய ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார். அதன் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில், ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கினார். அப்போது துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் (SLV Rocket) ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
இவ்வாறே, அவர் 1980 ஆம் ஆண்டில் SLV-III ஐப் பயன்படுத்தி, ரோகினி – I என்ற துணைக்கோளை விண்ணில் செலுத்தினார். இந்த ஏவுகணை செலுத்துதல் வெற்றியடைந்து, இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனையாக அமைந்தது. இந்த வியத்தகு செயலைப் பாராட்டியே, 1981-ல் இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இவ்வாறு, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பல்வேறு சிறப்பான பணிகளைச் செய்தார். அதன் பின்னரே, 1999-ல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் தனது பங்களிப்பை ஆற்றினார். இந்தியாவின் அணு ஆயுத வல்லரசாக ஏபிஜே அப்துல்கலாம் மாற்றியதுடன், இதுவரை ஐந்து ஏவுகணைத் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இத்தகைய சிறப்பான பணிகளை ஆற்றிய இவர், இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னராக ஆனார் அப்துல்கலாம். கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், வெற்றி பெற்று இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவரானார். இவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் ஜூலை 25, 2002 ஆகும். குடியரசுத் தலைராகப் பொறுப்பேற்றதற்கு முன்னதாகவே பாரத ரத்னா விருதைப் பெற்ற இவர், பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். இவரது குடியரசுப் பதவிக் காலம் 2002 முதல் 2007 ஆகும். இவர் மக்களின் ஜனாதிபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்பதற்கு உதாரணமாய் இருந்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். நாட்டு மக்கள் அனைவரையும் தனது பேச்சாற்றலால் கவர்ந்த இவரது மரணமும் பேசிக் கொண்டிருந்த போதே நடந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜூலை 27 ஆம் நாள் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து காலமானார். இவரது மறைவு, நாட்டு மக்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்தது. உடலளவில் இவர் மறைந்திருந்தாலும், இவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் மற்றும் பேசிய சொற்பொழிவுகள் அனைத்திலும் இவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…