இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இளைஞரணிச் செயலாளராக தொடங்கியது முதல் இன்று வரையிலான அரசியல் பயணம் குறித்து பார்க்கலாம்...
ஆரம்பகட்ட அரசியல்:
அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் 2018ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஊராட்சி சபை கூட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் முன்நின்று நடத்தி அசத்தினார்.
அதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நட்சத்திர பேச்சாளராக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களுடன் கலந்துரையாடல் பாணியில் பிரச்சாரம் செய்தது அனைத்து மாவட்டங்களிலும் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாக கேள்வி கேட்டு, மக்களோடு மக்களாக கலகலப்பாக பேசி கவனம் ஈர்த்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசு மிகப்பெரிய வெற்றியை எட்டியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை பாராட்டும் விதமாக 2019ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சியில் இல்லாத போதும் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைந்து நீர் நிலைகளைத் தூர் வாருவது போன்ற நலத்திட்டங்களை மேற்கொண்டார்.
அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களான நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தி திணிப்பு போன்ற போராட்டங்களிலும் தீவிரமாக முன்னெடுத்து நடத்தினார். அதேபோல் அதிமுக அரசின் ஊழல்களைக் கண்டித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
சட்டமன்ற தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்து திமுகவின் இளைஞர் அணியை வலுப்பெறச் செய்தார். அவர்களைக் கொண்டு கொரோனாவில் தவித்த ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை விநியோகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்:
2021ம் ஆண்டு உதயநிதியின் அரசியல் வாழ்க்கை மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் அந்த தேர்தலில் தான் முதன் முறையாக திமுக சார்பில் வேட்பாளராக களம் கண்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 69,355 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளராக மட்டுமின்றி, நட்சத்திர பேச்சாளராகவும் அந்த தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு கொண்டு வந்துள்ளேன். இதுதான் மத்திய அரசு மதுரையில் கட்டுவதாக சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனை என கையில் ஒற்றை செங்கலுடன் வந்து கெத்துகாட்டினார். இந்த செய்தி தமிழ் ஊடகங்களில் மட்டுமின்றி தேசிய அளவிற்கு கவனம் பெற்றது.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு 20 ஆயிரம், பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கி, கடந்த கல்வி ஆண்டில் மட்டும் ஒரு கோடி அளவிற்கு நிதி உதவி செய்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகள் கடலில் கால் நனைப்பதற்காக பிரத்யேக வழித்தடத்தை மெரினாவில் உருவாக்கினார். ஆட்சியைப் போலவே கட்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் பயிற்சி பாசாறை, இல்லம் தோறும் இளைஞர் அணி, கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கெளரவித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் மக்கள் பணி மற்றும் கட்சி பணியைப் பார்த்த மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் கூட அமைச்சர் பதவி என்று சொல்லாமல் புதிய பொறுப்பு என பேசியுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…