தெலுங்கானா மாநிலத்தில் இந்து பெண் ஒருவரை தேர்வு எழுத மாங்கல்யத்தை கழற்றி விட்டு செல்லுமாறும், அதே சமயம் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்து தேர்வு மையத்திற்குள் நுழைவதைப் பார்த்ததாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் போடுவது தொடர்பாக குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் பிளவுபட்ட தீர்ப்பை அளித்தது. இதற்கான முடிவு இன்னும் பிறப்பிக்காத நிலையில், தற்போது தெலுங்கானாவில் ஏற்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வு, அடிலாபாத்தில் உள்ள வித்யார்த்தி ஜூனியர் & டிகிரி கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில், இந்து பெண்களிடம் வளையல்கள், காதணிகள், கால் மோதிரங்கள், செயின்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் கழற்றி விட்டுச் செல்லுமாறும், சில பெண்களிடம் மாங்கல்யத்தை அவிழ்க்குமாறும் கூறி தேர்வு எழுத நுழைவதற்கு பாதுகாப்புப் பணியாளர்கள் கேட்டுள்ளனர். அதே சமயம் முஸ்லீம் பெண்கள், புர்கா அணிந்து தேர்வு மையத்திற்குள் நுழைவதைப் பார்த்ததாகவும், அவர்களை காவல்துறை அதிகாரிகள் உட்பட யாரும் தடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. அதில், பர்தா அணிந்த ஒரு பெண் தேர்வு மையத்திற்குள் நுழைவதும், மற்ற பெண்கள் தேர்வு மையத்திற்கு செல்ல தங்கள் நகைகளை அகற்றியவாறும் உள்ளது. இந்த வீடியோ பாஜக தலைவரான பிரித்தி காந்தி அவர்களால் பகிரப்பட்டது. இதில், “நேற்று தெலுங்கானாவில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் நடந்தது. தேர்வு எழுத புர்கா மையத்திற்கு அனுமதி உண்டு. ஆனால், வளையல்கள், காதணிகள், போன்றவற்றை அகற்ற வேண்டும். உண்மையிலேயே இது வெட்கக் கேடானது” என்று கூறி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசு சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியலைச் செய்கிறது என அந்த மாநிலத்தைச் சேர்ந்த மற்ற பாஜக தலைவர்களும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், பாஜக தலைவர்கள் சிலர், “முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிந்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்த போது, இந்துப் பெண்களை வளையல்கள், கால் மோதிரங்கள், செயின்கள், காதணிகள், மாங்கல்யம் உள்ளிட்டவற்றை கழற்றச் சொன்னது எப்படி?” என கேள்வி எழுப்பினர்.
மறுபுறம், டிஆர்எஸ் தலைவரான கிரிஷின் அவர்கள் தேர்வு மையத்தில் அனைவரும் சமமாக சோதனை செய்யப்பட்டதாகவும், பாஜக வகுப்புவாத அமைதியைக் குலைப்பதாகவும் விமர்சித்துள்ளார். பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை பாதுகாப்புப் பணியாளர்கள் சோதனை செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டதாவது, “டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற்ற சமயத்தில், இந்திய அரசின் போட்டித் தேர்வு வழிகாட்டுதல்களின் படி எந்த வித பாரபட்சமுமின்றி அனைத்து விண்ணப்பதாரர்களையும் போலீசார் சோதனை செய்தனர். ஆனால், தெலுங்கானாவின் மத அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க விரும்பும் பாஜக சில தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்களை மட்டும் பகிர்ந்துள்ளது” என்று கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையில், அடிலாபாத் காவல்துறை கண்காணிப்பாளரான உதய் குமார் ரெட்டி அவர்கள் கூறுகையில், சில தவறு காரணமாக, பெண்களின் மாங்கல்யம் உள்ளிட்ட ஆபரணங்களை இந்து பெண்களிடம் கழற்றுமாறு கூறப்பட்டதாகவும், இது பின்னர் சரி செய்யப்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் இவர், “ஆரம்பத்தில் இது மண்டல வருவாய் அதிகாரி ஒருவர் செய்த தவறு. இதன் காரணமாக இந்து பெண்கள் அனைத்து பொருள்களையும் அகற்றும் படி கேட்கப்பட்டனர். ஆனால், பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து மாங்கல்யம் அணிந்த இந்து பெண்களை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்” என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…