நவராத்திரி என்றால் ஒன்பது தெய்வங்களின் வழிபாடு என்று கூறுவோம். ஆனால், நவராத்திரி விழா எப்படி வந்தது என்பதையும், இந்த விழாவில் ஏன் வீட்டில் கொலு வைத்து வழிபடுவர் என்றும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
அதே போல, நவராத்திரி பொதுவாக 10 நாள்கள் கொண்டாடப்படுவதாகும். இதில் முதல் 9 நாள்களில் ஒன்பது அம்மன் தெய்வங்களை வழிபடுவர். அதனைத் தொடர்ந்து 10 ஆவது நாள் தசமி திதி அல்லது விஜயதசமி என அழைக்கப்படுகிறது. இது தசரா என்றும், மகிஷாசுரனை துர்கா தேவி வென்ற நாளாகவும் கூறப்படுகிறது.
முந்தைய காலத்தில் அசுர வம்சத்தினர், கடும் தவம் புரிந்து தெய்வங்களிடம் வரம் பெற்று வானுலக தேவர்களையும், பூவுலக மக்களையும் துன்புறுத்தி வந்தனர். அந்த வகையில், சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் தெய்வங்களிடம் சாகா வரம் பெற்று மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்களுக்கும் சித்திரவதை செய்து வந்தனர்.
இதனால், மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது என எண்ணிய தேவர்கள் சிவனிடமும், விஷ்ணுதேவரிடமும் முறையிட்டனர். அப்போது, பிரம்ம தேவரையும் சேர்த்து ஆலோசித்த அவர்கள், அந்த அசுரர்களை யாராலும் வெல்ல முடியாத வரத்தைப் பெற்றுள்ளனர் என்று கூறினர்.
இதனையடுத்து, தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தனை செய்தனர். மக்களின் துன்பத்தைக் கண்டு ஆதி சக்தி பூமியில் மங்கை உருவமாக அவதாரம் எடுத்து வந்தாள்.
இந்த சமயத்தில், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி அன்னை சக்தி தேவிக்கு அளித்து, இவர்கள் சிலை ஆனார்கள்.
இதே போல, இந்திர தேவனும், அஷ்டதிக்குப் பாலர்கள் அனைவரும் தங்களின் ஆயுதங்களை வணங்கி சிலையாக நின்றுள்ளனர். இவ்வாறு இவர்கள் சிலையாக நின்றதைக் குறிப்பிடவே, பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை சக்தி, ஆயுதங்களைத் தனது பத்துக் கரங்களில் தாங்கியவாறு போர் செய்து சும்ப, நிசும்ப அசுரர்களையும், அவர்களது படைத்தளபதிகளான கைடபன், மது, ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டினாள்.
அந்த காலத்தில், போர் புரிவதற்கென ஒரு சில சட்ட திட்டங்கள் உள்ளது. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு எவரும் போர் புரியக் கூடாது. இந்த நேரத்தில் படைகள் தங்களது கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். இந்த சமயத்தில் தான் படைக்கு ஊக்கம் அளிக்கவும், அடுத்த நாளில் உற்சாகமாகப் போரிடவும், அம்மனை வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு ஒன்பது இரவுகள் நடந்ததால், இது நவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஒன்பது நாள்களும், பராசக்தி ஒவ்வொரு வடிவிலும் அவதாரம் எடுப்பாள். அதன் படி ஒரு வயது முதல் 10 வயது வரை கன்னிப்பெண் அவதாரம் எடுத்து, ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்து வழிபடுவதைக் குறிக்கிறது.
இந்த நவராத்திரி காலங்களில் தினமும், பகல் நேரத்தில் சிவ பூஜையும், இரவு நேரத்தில் அம்பிகை பூஜையும் செய்து வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும் என்று கூறுவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…