சென்னை: ரஜினி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த சிவாஜி படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக விளங்குபவர் ரஜினிகாந்த். ஒவ்வொரு அசைவும் ஸ்டைலாக இருக்க சூப்பர் ஸ்டார் நாற்காலியில் பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான எத்தனையோ படங்கள் மெகா ஹிட்டடித்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க படம் சிவாஜி.
பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்த ஷங்கர் அந்நியன் படத்தை முடித்த கையோடு ரஜினியோடு தனது கையை கோர்த்தார். ஏவிஎம் பேனரில் ரஜினியும், ஷங்கரும் இணைகிறார்கள் என்ற அறிவிப்புதான் அந்த சமயத்தில் பல வாரங்களுக்கு சினிமா தலைப்பு செய்தியாக இருந்தது. அவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துகொள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்க்ளுக்கு பல மடங்கு அதிகரித்தது.
படமும் ஜூன் 15ஆம் தேதி 2007ஆம் வருடம் ரிலீஸானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் காட்சிகளும், பாடல்களும் அமைந்திருந்தன. குறிப்பாக ரஜினிக்கு வைக்கப்பட்டிருந்த பஞ்ச் டயலாக்குகளும், அதை அவர் பேசிய விதமும் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து சென்றது. பேர கேட்டா சும்மா அதிருதுல்ல, சிங்கம் சிங்கிளாத்தான் வரும்,பராசக்தி ஹீரோடா என ஒவ்வொரு வசனத்தையும் ஒரே வரியில் முடித்திருப்பார். இருந்தாலும் அந்த பஞ்ச் டயலாக்குகள் இன்றுவரை ட்ரெண்டங்கில் இருக்கின்றன.
பொதுவாக கமல் ஹாசன் மீது ரஜினிக்கு எப்போதுமே பெரிய மரியாதை உண்டு. அதை பல மேடைகளில் அவரே கூறியிருக்கிறார். ஆனால் அதனை படத்தில் காட்டியது சிவாஜிதான். ஒரு காட்சியில் நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என ஸ்ரேயா கூற,உடனடியாக வெள்ளையாக மாற வேண்டும் என பல முயற்சிகளில் இறங்குவார் ரஜினிகாந்த். அப்போது குங்குமப்பூவை பயன்படுத்துகையில், ‘எப்டி கமல் ஹாசன் மாதிரி ஆகப்போறேன் பாரு’ என ரஜினி கூறியது இன்றுவரை ரசிக்கப்படுவது உண்டு.
ஏனெனில் எந்த ஒரு ஹீரோவும் தனது சக போட்டியாளரின் பெயரை தனது படத்தில் பயன்படுத்தவே யோசிக்கும் சூழலில் ரஜினிகாந்த்தோ ரொம்ப ஓபனாக தன்னை கீழ் இறக்கி நடித்திருப்பார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஷங்கரின் படங்களில் எப்போதுமே சமூகம் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவது உண்டு. சிவாஜி படத்திலும் அது இருந்தது. வழக்கம்போல் ஊழல், லஞ்சம் என்ற டெம்ப்ளேட்டுக்குள் இருந்தாலும் கல்வி என்ற அடிநாதத்தை தொட்டதன் மூலம் சிவாஜி முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. குறிப்பாக,ரஜினியிடம் யாசகம் கேட்கும் இடத்தில் இந்தியா இன்னும் மாறவே இல்லை என ரஜினி கூறுவது எதாரத்தத்தோடு படமாக்கப்பட்டிருக்கும். சில கிளிஷே காட்சிகள் இருந்தாலும் ஷங்கரின் லிஸ்ட்டில் சிவாஜி என்றுமே கமர்ஷியல் ப்ளஸ் க்ளாஸ் படம் என்ற பெயரோடு இருக்கும்.
ஒருபக்கம் ஷங்கரின் மேக்கிங், ரஜினியின் நடிப்பு, சுஜாதாவின் வசனம் என பட்டையை கிளப்ப மறுபக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பங்குக்கு மிரட்டியிருப்பார். முக்கியமாக ரஜினிக்கு ஓபனிங் பாடல் என்றாலே வைரமுத்து அல்லது வாலி என்ற சூழ்நிலையை சிவாஜி மாற்றியது. ஓபனிங் பாடலை நா.முத்துக்குமார் எழுதினார். அந்தப் பாடலில் ஒட்டுமொத்த கதையையும், அண்ணே வந்தா தமிழ்நாடு அமெரிக்கா போன்ற பல வரிகளில் பயன்படுத்தியிருப்பார். அதேபோல் பா.விஜய், வைரமுத்து, வாலி என மொத்தம் நான்கு பாடலாசிரியர்கள் பணியாற்றிய படம் என்பதால் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை கொடுக்கக்கூடியவை.
பாடல்கள் இசை மட்டுமின்றி பின்னணி இசையும் மிரட்டல் ரகம். ஒரு ரூபாய் காயினை ரஜினி சுண்டும்போது இனி நான் போகப்போறது சிங்கப்பாதை என்ற ஒரு வசனம் வரும். அப்போது இசைப்புயலின் பின்னணி இசையையை நினைத்தாலே ரோமங்கள் துளிர்க்கும் தருணம். அதேபோல் சோகமான காட்சிகளுக்கு புல்லாங்குழல் உள்ளிட்ட பல கருவிகளை பயன்படுத்தி அமைத்த பின்னணி இசையை கேட்டாக கண்ணீர் உதிரும் தருணம். இப்படி பல விஷயங்களில் கம்ப்ளீட் கமர்ஷியல் பேக்கேஜான சிவாஜியின் பெயரை கேட்டால் எப்போதுமே தமிழ் சினிமா அதிரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…