பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியல் சட்ட திருத்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரனை நடத்தியது. இந்தநிலையில், தலைமை நீதிபதி லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். மேலும், மற்ற மூன்ரு நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால், பெரும்பான்மை அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என்று 7-11-2022 அன்று தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தவகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 10:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியடைந்தது போல, அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்று கனவில் மிதந்து வருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அரசில் கொஞ்சி குலாவியபோது ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நீட், நியுட்ரினோ மற்றும் 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு, பூம் பூம் மாடு போல தலையாட்டிவிட்டு இன்னைக்கு ஏதோ வறியவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்தது போல வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார் இந்த பேசா மடந்தை முதலமைச்சர்', என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில், நாளை நடைப்பெறும் சட்டமன்ற தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…