2020ம் ஆண்டு தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்தும், கொரோனா தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சீனாவில் (China Corona Cases) திடீரென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் பிற நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, வேறு சில நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அந்தந்த நாடுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள், வரும் நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கலாம என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த நாடுகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு நீங்கள் அங்கே போகாமல் இருப்பது நல்லது. நீங்கள் அவசரமாக செல்ல வேண்டியிருந்தால், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மறக்காதீர்கள்.
சீனா:
2019 ஆம் ஆண்டு முதல் சீனாவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தற்போது மீண்டும் ஒரு கடினமான காலகட்டத்தை சீனா எதிர்கொண்டுள்ளது உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. ஏனெனில் நாளொன்றுக்கு 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக, மூச்சுதிணறல் போன்ற பிரச்சனைகளால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இறப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தற்போது பரவி வரும் ஒமைக்ரானின் துணை வைரஸான பிஎஃப்.7 முதியவர்களை அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரேசில்:
பிரேசிலில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. போதாக்குறைக்கு இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அல்லது வேறு மாதிரியான வைரஸ் தொற்றா? என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பிரேசில் மீண்டும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ்:
ஐரோப்பாவின் மற்றொரு பெரிய நாடான பிரான்ஸிலும் கடந்த 28 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் இடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக, அங்கு சோதனைகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி:
ஜெர்மனியில் கடந்த சில நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டுக்கு செல்லாமல் இருப்பதே நல்லது எனக்கூறப்படுகிறது.
ஜப்பான்:
ஜப்பானில் மீண்டும் கோவிட் தொற்று பரவி வருகிறது. சமீபகாலமாக தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
தென் கொரியா:
தென் கொரியாவைப் பொறுத்த வரை இன்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 68,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 95 பேர் அந்நாட்டுக்கு வந்த வெளிநாட்டினர். அங்குள்ள அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த வாரத்தை விட இன்று 1200 பேருக்கு தொற்று அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு குளிர்காலம் என்பதால் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா:
அமெரிக்காவிலும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை அறியப்பட்ட விவரங்களின்படி, கடந்த 28 நாட்களில் நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2020 முதல் டிசம்பர் 21 வரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…