பொதுவாக, சினிமா பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஒருவேளை சொன்னால் தங்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விடுமோ என்று பயப்படுவார்கள். ஆனால், இந்த காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு நோய் இருந்தாலும், அதை தைரியமாக எதிர்க்கொள்ளும் பிரபலங்களுக்கு பட வாய்ப்புகளை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில், 2022 ல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட திரை பிரபலங்களின் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.
பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவரும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு Vestibular hypofunction எனும் அரிய வகை நோய் இருப்பதாக அவரே தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். நம்முடைய உள் காதுக்கும் நம் கண்கள் மற்றும் மூளைக்கும் இடையே உள்ள இணைப்பை தான் 'வெஸ்டிபுலர் அமைப்பு' என்பார்கள். இந்த அமைப்பு தான் நாம் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது அல்லது தரையில் நடக்கும்போது சமநிலையாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த அமைப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உள் காதின் சமநிலை பகுதி சரியாக வேலை செய்யாது. இதை தான் 'வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன்' (Vestibular Hypofunction) என்றழைக்கப்படுகிறது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது யோகா, பிசியோ, நீச்சல், லைஃப்ஸ்டைலை மாற்றிய பிறகு நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் கவுர் (36). தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் பூனம் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பூனம் கவுர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பாதித்தால் எலும்பின் ஜாயின் பகுதியில் வலி ஏற்படும். மூளை, முதுகு தண்டு பகுதியில் அதிக வலி இருக்கும் என்று கூறப்படுகிறது. பூனம் கவுர் இந்த நோயுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்தாண்டு தான் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா..' பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.
தமிழில் கடைசியாக யசோதா படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில், மயோசைட்டிஸ் (Myositis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த சமந்தா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார். தற்போது, மேல் சிகிச்சைக்காக தென் கொரிய நாட்டிற்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில், பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். அதை தொடர்ந்து, ஏகன், பலே பாண்டியா, கோ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர், சமந்தாவை போன்றே தானும் மயோசைட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் காலில் வீக்கம் ஏற்பட்டதை சாதாரணமாக விட்டுவிட்டேன். அதன் மறுநாளில் இருந்து வீக்கம் அதிகமாகி வலி ஏற்பட்டது. பின்பு பரிசோதனை செய்த பின்னர் தசை அலர்ஜி நோய் இருப்பது கண்டிபிடித்து சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். சமந்தாவின் நிலையில் நானும் உள்ளதால் அவருடைய வலி வேதனைகள் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என உருக்கமாக கூறி இருந்தார்.
நடிகையும் தொகுப்பாளினியுமான் திவ்யா தர்ஷினி (டிடி), சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு கூட வீல் சேரில் வந்திருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியான பிரபலங்களும், ரசிகர்களும் என்ன ஆச்சு என்று கேட்கவே, தனக்கு ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார். அதோடு, சமந்தாவை போன்றே இவரும் மயோசைட்டிஸ் நோயால் பாதித்துள்ளதகாவும் தெரிவித்தார். தற்போது மற்ற சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வருவதால், இன்னும் மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுக்க வில்லை என தெரிவித்திருந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…