எந்நாளும் இல்லாத சிறப்பு இந்த தைப்பூச திருநாளில் உள்ளது. தை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் பூசம் நட்சத்திரம் வரும் போது, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. இது இந்த நாளின் சிறப்பு நிகழ்வாகும். இது போல எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்ட இந்த தைப்பூச நன்னாளில் சிறப்புத் தலமாக விளங்குவது கொடுமுடிநாதர் கோவிலும் ஒன்றாகும். ஏன், இந்த கோவில் தைப்பூச சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது என்பது பற்றிக் காணலாம். மேலும், இந்த கொடுமுடி நாதர் மகுடேஸ்வரர் கோவில் குறித்த வரலாற்றைப் பற்றி இதில் காண்போம்.
கொடுமுடிநாதர் மகுடேஸ்வரர் தல வரலாறு தனிச்சிறப்பு மிக்கது. ஒரு சமயம், வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களுள் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இதற்கு, இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதற்கு விதிமுறையாக, ஆதிசேஷன் மேருமலையை தன்னுடைய ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. வாயுதேவன் அதனை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன் படி, வாயுதேவன் தன்னுடைய பலம் அனைத்தையும் சேர்த்து, காற்றடித்தார். இதனால், அங்கிருந்த மேரு மலையின் ஐந்து சிகரங்களும் அங்கிருந்து பிய்த்து தென் திசையில் பல பாகங்களில் வந்து வீழ்ந்தது. இவ்வாறு ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி, ஒவ்வொரு இடத்தில் வீழ்ந்தது. இவ்வாறே ஐந்தும் ஒவ்வொரு தலமானது. அந்த வகையில், வைரம் வீழ்ந்த இடமானது கொடுமுடியாக மாறியது.
காவிரி நதி ஓடிக் கொண்டிருக்கும் திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடிநாதர் மகுடேஸ்வரரைக் காணலாம். மேற்கு கரையில் கிழக்கு திசை பார்த்தவாறு அமைந்திருக்கும் இந்த கோவிலின் சிறப்பாக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் ஒரே இடத்தில் காணலாம். மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது இந்த தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இந்த தலத்தில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளது.
தைப்பூசம், பங்குனி உத்திர விழா போன்ற திருவிழாக்கள் நடைபெறும் சமயத்தில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக வன்னி மரம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதியில் முட்கள் இல்லாமலும் காணப்படுகிறது. இந்த மரமானது ஆண் மரமாகக் கருதப்படுகிறது. இதனால், இந்த மரத்தில் பூக்கள் பூப்பதோ, காய்கள் காய்வதோ கிடையாது.
இது இந்த இடத்தின் மற்றொரு சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. தீர்த்தக் காவடி செல்லும் பக்தர்கள், தண்ணீரில் இந்த வன்னி மர இலையைப் போட்டு பாதயாத்திரைக்குக் கொண்டு
செல்கின்றனர். இதனால், தைப்பூசத் திருநாள் அன்று முருகனை வேண்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
இந்த தலத்திற்கு வந்து வன்னி மரத்தின் இலையுடன் கூடிய தீர்த்தக் காவடி எடுத்து முருகப் பெருமானை வணங்குவர்.
ராகு கேது தோஷம், நாகதோஷம் உடைய நபர்கள், இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்வதால் நல்ல பலன்களைப் பெறலாம். அதாவது, நாக தோஷம் கொண்டவர்கள், தோஷம் நீங்குவதற்கு ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ அத்தனை குடம் நீர் எடுத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின், வன்னி மரத்திற்கு அடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்வதன் மூலம், நாக தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலானது ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் உள்ளது. கரூரில் இருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் உள்ளது.
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பாண்டிக் கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் – 638 151.
தரிசனம் செய்வதற்கான நேரம்:
காலை 06.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
காலை 04.30 மணி முதல் காலை 09.00 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…