சென்னையில், தவறான சிகிச்சை அளித்ததால், கால்பந்து வீராங்கனை பிரியா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா என்ற 17 வயது மாணவி. இவர், கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாட்டால், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகள் புரிந்து வந்தார். இவர், சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்றும் வந்தார்.
சமீபத்தில் பயிற்சியின் போது இவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் இராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு காரணமாக சவ்வு விலகி இருப்பதாக ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரையில் சிகிச்சை எடுத்து, கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததில் தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின்னும் கால்வலி குறையாததால் மீண்டும் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கு பரிசோதித்த மாணவர்கள், காலில் தசைகள் அனைத்தும் அழுகக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறி காலை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வேறு வழியில்லாமல், உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், காலை அகற்ற சம்மதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இவருக்கு அறுவை சிகிச்சை மூலம், கால்கள் அகற்றப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை பிரிவில், இரத்த நாள சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், சிறுநீரகவியல் துறை நிபுணர், பொது மருத்துவ சிகிச்சை நிபுணர் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக, அவருடைய உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, சிறுநீரகம், ஈரல், மற்றும் இதயம் போன்றவை பாதிக்கப்பட்டு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் பிரிவைத் தாங்க முடியாத பெற்றோர், அதிர்ச்சியடைந்து, மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இறந்த மாணவியின் உடலை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…