பொன்னியின் செல்வன் 001
சங்ககால பார்ப்பனர்கள் என்றால் குடுமி போட்டுக்கொண்டு பூசை செய்து கொண்டு ஹோமம் வளர்த்துக்கொண்டு சாமிக்கு படையல் வச்சிட்டு இருப்பாங்கன்னு நினைச்சீங்களா? சோழன் ஆதித்த கரிகாலனையே கொன்னுருக்காங்க, என்று யூடியூப் சேனல்களில் ஹரி பட வசனத்தை விட ஆக்ரோஷமாக பேசி பல வீடியோக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? ஆதித்த கரிகாலனை உண்மையிலேயே கொன்றது யார்? உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்வோம். இது பொன்னியின் செல்வன் - ரீவிசிட்...
ஆரியத்தை வேரூன்றச் செய்த சோழ மரபிற்கு, அவர்களின் வாரிசையே கொலை செய்து பரிசாக அளித்தது ஆரியம். பல்லவர்களின் வழியிலே பிரம்மதேயம் வழங்கிய சோழர்களுக்கு கிடைத்த பரிசு, இளவரசர் ஆதித்த கரிகாலன் படுகொலை.
விசயாலச் சோழன் சோழ மரபைத் தொடங்கி வைத்தவர். அவருடைய மகன் முதலாம் ஆதித்த கரிகாலன். இவருக்குப் பிறகு இவரின் மகன்களான முதலாம் பராந்தகன், கன்னர தேவன் இருவரில், முதலாமவர் ஆட்சி புரிந்தார்.
முதலாம் பராந்தகனின் மகன் கண்டராதித்தன். கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவி. மகன் உத்தமச்சோழன். கண்டராதித்தன் இறந்தபோது உத்தமச் சோழன் சிறுவராக இருந்ததால், அவரின் சித்தப்பாவும், கண்டராதித்தனின் தம்பியுமான அரிஞ்சயன் அரியணை ஏறினார்.
உத்தமச் சோழனின் சித்தப்பா அரிஞ்சயனின் மகன் சுந்தரச் சோழன்.
இந்த சுந்தரச் சோழனின் மகன்கள்தான் ஆதித்த கரிகாலனும் (II) அவன் தம்பி அருள்மொழி வர்மனும். இவர்களுடன் பிறந்தவர் தான் குந்தவை.
அரசரான சுந்தரச் சோழனின் மகன் இளவரசன் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டது வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் யார் கொலை செய்தார் என்பது சர்ச்சையாக இருந்தது. பின்னாளில் அது யார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இன்றளவும் அதனை பலர் ஏற்காமல் இருக்கிறார்கள். காரணம் பார்ப்பனர்கள்தான் கொலைக்கு காரணம் என்பதால்....
அரசர் சுந்தரச் சோழர் தன்னுடைய மகன் இளவரசர் ஆதித்தன் கொலையுண்ட நிலையில், நிலை குலைந்து, பின்னாளில் இறந்துவிட, அந்த பதவி அருள்மொழி வர்மனைத் தேடி வருகிறது. ஆனால் தன்னுடைய தந்தை சுந்தரச் சோழனின் பெரியப்பா மகனான உத்தமச் சோழனை அரசராக்கினார். அவருடைய 16 வருட ஆட்சிக்குப் பிறகே தான் அரசாகி சோழர் நாட்டை ஆண்டார் ராஜ ராஜ சோழன்.
இந்த வரலாற்று உண்மையை நமக்களித்த பேராசிரியர் ப.நீலகண்டர் தன்னுடைய சோழர் வரலாறு எனும் ஆராய்ச்சி நூலில் ஒரு முக்கியமான உண்மையை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு உண்டு.
அதாவது ஆதித்த கரிகாலனை அவரது சித்தப்பா உத்தமச் சோழனே கொன்றிருக்கலாம் அல்லது அந்த கொலைச் சதியில் இவரும் உடன் பட்டிருக்கலாம் என நீலகண்டர் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியது உண்மை இல்லை எனவும், அதனை மறுத்தும் அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேராசிரியர் சதாசிவம் அவர்கள் 3 விசயங்களைக் கூறுகிறார்.
ராஜ ராஜ சோழன் எனும் அருள்மொழி வர்மன், தன் அண்ணனின் கொலையில் சித்தப்பாவுக்கு தொடர்பிருந்திருந்தால், அவருக்கு பயந்து ஆட்சியை ஒப்படைத்தார் அல்லது உள்நாட்டு கலவரம் வரும் என நினைத்து ஒப்படைத்தார் என்பதெல்லாம் பொய்யாகத்தான் இருந்திருக்கும். காரணம் அவருக்கு மக்கள் செல்வாக்கும், அமைச்சர்கள் செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது. படை பலமும் மக்கள் செல்வாக்கும் கொண்ட அவர் போர் புரிந்து தானே ஆட்சியைக் கைப்பற்றியிருப்பார். ஆனால் அவருக்கு பதவி ஆசை இல்லை என்பதனாலேயேதான் தன்னுடைய சித்தப்பாவுக்கு ஆட்சியை விட்டு கொடுத்தார்.
உத்தமச் சோழன் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார் ராஜ ராஜ சோழன். இதனை திருவாலங்காட்டுச் செப்பேடு மூலம் உறுதி செய்யலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் தன்னுடைய அண்ணனை கொலை செய்த சதிகாரனாக இருந்திருந்தால் அவருக்கு எப்படி அன்பு சாத்தியப்பட்டிருக்கும்.
உத்தமச்சோழனின் ஆட்சி மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் நடைபெற்றது. மக்களும் படைகளும் ராஜ ராஜனுக்கு ஆதரவு அளித்தது போல உத்தமனுக்கும் ஆதரவளித்தனர். இதிலிருந்து உத்தமச் சோழர் நல்லவர் என்பதே அறியமுடிகிறது. ஒருவேளை அவர் அப்படி செய்திருந்தால், கலகங்கள் நடைபெற்று அமைதியற்ற நிலைதான் உள்நாட்டில் நிலவியிருக்கும். அப்படி நடந்ததற்கான எந்த சான்றும் இல்லை.
இதிலிருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றது உத்தமச் சோழன் இல்லை என்பது நிரூபணமாகிறது. அவரைக் கொன்றது பார்ப்பனர்களே என்பதை கல்வெட்டிலேயே சொல்லியிருக்கிறார்கள்.
சோமன்,
இருமுடிச்சோழ பிரமாதிராஜன்,
மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன்,
ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்
எனும் நால்வர்தான்.
அரச பதவியில் இருந்த பார்ப்பனர்கள் இவர்கள். உயர்ந்த பட்டங்களைப் பெற்றவர்கள். இவர்கள் எதற்காக ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ய வேண்டும்? அதற்கான காரணம் என்ன?
புதுக்கோட்டை அருகே சேவூர் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் ஆதித்த கரிகாலனும், வீரபாண்டியனும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள்.
பாண்டிய மன்னனான வீரபாண்டியனின் தலையைக் கொய்து போரில் வென்றவன் ஆதித்த கரிகாலன். இந்த கொலைக்கு பழிக்கு பழியாகவே ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…