நம் சரும பராமரிப்பு மற்றும் உடல்நலம் இவை இரண்டிற்கும் பொதுவாக பயன்படுத்தக் கூடிய பொருள் என்றால் அது கற்றாழை தான். பெரும்பாலான வீடுகளில் கற்றாழை செடி வளர்த்திருப்பதைக் காண முடியும். இதனைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் உண்டு. இதன் எண்ணற்ற பயன்களின் காரணமாக, எந்த காலத்திலும் எந்த வித குழப்பமும், தயக்கமும் இல்லாமல் இதனை உபயோகிக்கலாம் என கூறுவர்.
குளிர் காலம் என்றாலே அனைவரின் மனதிலும் எழுவது சரும பிரச்சனைகள் தான். இந்த காலத்தில் சருமம் வறண்டு போவது மட்டுமல்லாமல், தலையில் பொடுகு பிரச்சனைகளும் அதிகமாகும். இந்தப் பிரச்சனைகளைச் சரி செய்ய நம்மிடம் இருக்கும் தீர்வு என்னவென்றால் அது கற்றாழை தான். இதில் உள்ள பல்வேறு விதமான சத்துக்கள் அதாவது கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்டவை சரும பாதுகாப்பையும், முடி பிரச்சனைகளுக்கான தீர்வையும் அளிக்கிறது.
வழக்கத்தை விட அதிகமான சரும பராமரிப்பு என்பது குளிர் காலத்தில் மிக முக்கியமானதாகும். முகம் சோர்வடைவதுடன், உதடுகள் வறண்டு, தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, குளிர்காலத்தில் கற்றாழையைப் பயன்படுத்துவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. அதிலும், எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது நல்லது. சரும பராமரிப்பிற்கு மட்டுமல்லாமல், முடி பராமரிப்பிற்கும் உதவக் கூடிய கற்றாழையின் நன்மைகளைப் பற்றிக் காண்போம்.
பளபளப்பான சருமத்திற்கு தேவையானவை
குளிர்காலத்தில் நம் சருமமானது எப்போதும் இருப்பதை விட மிகவும் வறண்டு போய் இருப்பதைக் காணலாம். இதற்கு, மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவர். இருப்பினும், எந்தவித வேதிப்பொருள் கலப்பும் இல்லாமல், இயற்கையாகவே வறண்ட சருமத்தை சரிசெய்ய கற்றாழையை உபயோகிக்கலாம். இதில் உள்ள திரவம் சருமத்திற்கு வழவழப்புத் தன்மையை தருவதுடன், பளபளப்பாக்குகிறது.
முகப்பருவை நீக்க
சரும பிரச்சனைகளில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒன்று முகத்தில் ஏற்படும் பருக்கள். இந்தப் பருக்களை நீக்குவதற்கு, சந்தைகளில் விற்பனையாகக் கூடிய பல்வேறு கிரீம்களை உபயோகிப்பர். இருப்பினும், இந்த வேதிப்பொருள்களைத் தவிர்த்து இயற்கையாகவே அதனைச் சரி செய்ய வேண்டும். அந்த வகையில், கற்றாழையில் உள்ள கிருமி நாசினிப் பண்புகள், முகத்தில் பாக்டீரியாக்களை அகற்றி, பருக்களை நீக்க உதவுகிறது.
தோல் பராமரிப்பிற்கு
இயற்கையான முறையில் நம் உடலில் ஏற்படும் வெடிப்பு அல்லது வேறு சில மாற்றங்களைத் தவிர, நம்மை அறியாமலேயே ஏதாவது கீறல்கள் ஏற்படும். அதனால், ஏற்படும் புண்களை மருந்து இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த புண்கள் இருக்கும் இடத்தில், சிறிது கற்றாழைச் சாறைத் தடவினால் சிறிது நேரத்திலேயே குளிர்ச்சியைத் தரும். இதன் மூலம், வடுக்கள் மறையும். எனவே, கற்றாழையானது தீக்காயங்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
வறண்ட கூந்தல் மற்றும் பொடுகு பிரச்சனைக்கு
நாம் முன்னரே கூறியவாறு கற்றாழையானது முடி பராமரிப்பிற்கும் உதவக் கூடியதாகும். இதன் மருத்துவ குணமானது, வறண்ட கூந்தலுக்கு சிகிச்சை அளித்து, மென்மையான கூந்தலாக மாற்றுவதாகும். இத்துடன், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், பொடுகு பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக கற்றாழை உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள், பொடுகு பிரச்சனைக்கும், முடி உதிர்தலுக்கும் தீர்வாக அமைகிறது.
இவ்வாறு குளிர் காலத்தில் கற்றாழை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம். இருப்பினும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள், கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு, அதன் பின் கற்றாழையை உபயோகித்துக் கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…