நீதி பகவானாக பார்க்கப்படும் சனி பகவான் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயங்களும் சிறப்பு மிக்கவையாக கருதப்படுகிறது. பொதுவாக, சனிபெயர்ச்சி பரிகாரம் போன்றவற்றிற்கு தான் சனி பகவான் கோவில்களை தேடுவோம். ஏனென்றால், ஒருவர் தான் அரியாமல் செய்த தவறுக்கான தண்டனையை, சனி பகவான் ஏழரை சனி வரும்போது கடுமையாக தண்டிப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். என்ன ஆகுமோ, எப்படி இருக்குமோ? என்ற நடுங்குவோம்.
ஆனால், சனி பகவான் கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகளை செய்வதன் மூலம் அவரின் தாக்கத்தில் இருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம். அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள சனீஸ்வரர் ஆலயங்களை பற்றி பார்க்கலாம். இங்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வாழ்க்கையில் மேலும் நற்பலன்களை அடையுங்கள். சனி பகவான் இருக்கும் ஆலயங்களில் எல்லாம், மற்ற தெய்வங்களையும் சனீஸ்வரரையும் வழிபட்டால் தான் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and Temple
காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. இங்கு தான் நள மகா சக்கரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகியதாக கூறப்படுகிறது. சனி பகவான் கோவில் என்றாலே நமக்கும் நினைவுக்கு வருவது இந்த திருத்தலம் தான். இங்குள்ள நள தீர்த்தம் விசேஷம் மிக்கது. இந்த குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், சனி பகவானையும் வழிபாடு செய்தால், சனி தோஷங்கள் அத்துனையும் விலகும்.
அதுமட்டுமல்லாமல், வாழ்க்கையில் நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம். தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில், ஒரு சிறு மாடம் போன்ற அமைப்பில் சனி பகவான் அமர்ந்து அருளாட்சி புரிகிறார். சிறப்பு மிக்க நாட்களில், இத்தலத்தில் இருக்கும் சனி பகவான், தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு திருக்காட்சி தருவார்.
மதுரையில் இருந்து 27 கி. மீ தொலையில் அமைந்துள்ள சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்கு போகும் பாதையில் ஒரு சனி பகவான் ஆலயம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் முருகப்பெருமானுக்காக ஆலயம் அமைத்து வழிபட விரும்பினர். அதற்காக ஆலயமும் சிலையும் தயார் செய்து கருவறையில் முருகன் சிலையை வைக்கும் நேரத்தில், காஞ்சி மகாமுனி வந்து இது சனி பகவான் சிலை என்று அடையாளம் காட்டி ஆசி அளித்தார். அதன்பின்னர், இது சனீஸ்வரர் ஆலயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இத்தலம் சனி தோஷம் நீக்குவதற்கும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாகவும் இருக்கிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள குச்சனூரில் சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாவிக்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய மூர்த்தம் இது. இத்திருத்தலத்தில் சனி பகவானுக்கு மஞ்சள் காப்பு சாத்தப்படுகிறது. சூரியனின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். இந்த குச்சனூர் சனீஸ்வரர் நீதியை வழங்குபவராகவும், வயிற்று வலியை நீக்குபவராகவும் திகழ்கிறார். தேனியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது மங்கம்மாபேட்டை. இங்கு இருக்கும் ஆலயத்தில் சனி பகவான், தன்னுடைய மனைவி நீலாதேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். எனவே, இந்த ஆலயத்தில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற சுப விசேஷங்களையும் செய்கிறார்கள்.
இவ்வாறு செய்வதால், குடும்ப நலன் மேம்பட்டு, ஆயுள் விருத்தியாகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். பிரமிடு போன்று அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் கருவறை விமானம் மிகவும் சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த திருத்தலத்தில், சனி பகவான் தன் சகோதரன் எமதர்மனுக்கு உரித்தான தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறார். அதுமட்டுமல்லாமல், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்குரிய சக்கரங்கள், சனி பகவானின் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கிரக தோஷங்களை நீக்கும் சிறப்புமிக்க ஆலயமாக திகழ்கிறது.
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு, இந்த திருத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது, அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளியங்கராயன், தன்னுடைய சனி தோஷம் நீங்குவதற்காக திருநள்ளாறு இவ்வழியாக சென்றுள்ளார்.
அகத்தியர் அந்த மன்னனை தடுத்து நிறுத்து, அஷ்டம சனிக்கு பரிகாரமாக தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும், இங்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடும் படி அறிவுறுத்தினார். மேலும், நவக்கிரகங்களை அமைக்குமாறும், ஈசனின் ஈசான பார்வை சனி பகவானின் மீது படும்படியும் கூறினார். அவர் சொன்னபடியே செய்த மன்னனின் சனி தோஷம் விலகியது. தமிழ்நாட்டில் சிறந்த சனி தோஷ பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
சென்னை பல்லாவரத்தை அடுத்து அமைந்துள்லது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு, பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானு ஒரு வரப்பிரசாதியாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்திற்கு சனீஸ்வர பகவான் நேரடியாக வந்து பூஜித்ததாகவும், இங்கிருக்கும் நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோசத்தை போக்கிக்கொண்டதாகவும் வரலாறு சொல்கிறது.
இதனால், தான் இத்தலத்தை வடதிருநள்ளாறு என அழைக்கிறார்கள். எனவே, திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து அகஸ்தீஸ்வரருக்கும், சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரத்தை செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். இந்த ஆலயத்தில் வேதபுரீஸ்வரரும், வேதநாயகி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். இங்கு சனி பகவானுக்கு என்று தனி சன்னதி இருக்கிறது. மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் சனி பகவானுக்கு முடக்கு வாத நோய் ஏற்பட்டது.
அந்த நோய் நீங்குவதற்காக, சனி பகவான் இத்தலத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டார். இதையடுத்து அவரது வாத நோய் நீங்கியது. அதனால் தான், இந்த திருத்தலத்திற்கு திருவாதவூர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு, ஈசனையும் சனி பகவானையும் வழிபட்டால் சனி தோசங்களில் இருந்து விடுபட முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…