வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார்.
அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் உங்க ராசிக்கு 6வது வீட்டிலிருந்து 7வது வீட்டிற்கு பெயர்ச்சியாக உள்ளார். இனி உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் பிறக்கிறது என்றே சொல்லலாம். 7வது கலஸ்த்திர ஸ்தானம் என்பதால் இழந்தவை எல்லாம் மீண்டும் கிடைக்கும். அர்த்தாஷ்டம சனியின் பிடியில் சிக்கி படாதுபாடு பட்டிருந்த துலாம் ராசியினருக்கு ஏற்கனவே சனி பெயர்ச்சியால் 50% விடிவு காலம் பிறந்திருக்கும். இப்போது குருபகவானும் உங்க ராசிக்கு சிறப்பான இடத்தில் அமர இருப்பதால் அதிர்ஷ்டம் தான்.
12 வருடங்களுக்கு பிறகு குரு பகவான் உங்க ராசிக்கு கலஸ்த்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால், பொருளாதார ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகி, சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்தவந்த நெருக்கடிகள் நீங்கி, புதிய வாடிக்கையாளர்கள் வருகைத் தருவார்கள். இதனால், மந்தமாக கிடந்த வியாபாரம் சூடு பிடிக்கும். லாபம் எதிர்பார்த்தைவிடவும் அதிகமாகவே இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் துலாம் ராசியினருக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நிச்சயம் திருமண யோகம் உண்டு. காதல் உறவில் இருந்த துலாம் ராசியினர் தம்பதிகளாவீர்கள். அதாவது, உங்க காதலுக்கு பெற்றோரிடத்தில் சம்மதம் கிடைத்துவிடும்.
மேலும், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த துலாம் ராசியினருக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் பல நன்மைகள் உண்டாகும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம். அவர்களே வாழ்க்கை துணையாகவதற்கும் வாய்ப்புண்டு. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பட்ட கஷ்டங்கள், பட்ட அவமானங்கள் அனைத்திற்கு பொற்காலம் பிறக்கப் போகிறது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனை சார்ந்த பிரச்சனைகள் விலகி சாதகமான பலனை தரும்.
குரு பகவானின் சஞ்சாரம் அமோகமாக இருப்பதோடு குருபகவானின் பார்வையும் சிறப்பாக உள்ளது. அதாவது, குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிலருக்கு மனதிற்கு பிடித்த வேலை மாற்றம் உருவாகும். வாழ்க்கைத் துணையோடு இருந்துவந்த வாக்குவாதங்கள், பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பாராட்டு ஏற்படும். சொந்த தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும்.
அதேபோல், 7வது பார்வையாக உங்க ராசிக்கு சுய ஸ்தானத்தை பார்வையிடுவதால், கேது பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறையும். குடும்ப பிரச்சனையால் நிம்மதி இல்லாமல் இருந்திருக்கும், தற்போது எல்லாவிதமான பிரச்சனையும் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பொங்கும். அரசாங்கத்தால் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 3வது வீடான இளைய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், புத்தி ஸ்தானத்தை பார்வையிடுவதால், எதிலும் துணிந்து இறங்குவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்த மனக்கசப்பு விலகும். மாணவர்களுக்கு அற்புதமான காலம் பொறக்க போகிறது.
தினமும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. மேலும், தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட்டு 'ஓம் நமச்சியவாய' என்ற மந்திரத்தை 24 முறை சொல்ல வேண்டும். சூரிய உதயத்திற்கு பிறகு 7 மணிக்கு மேல் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை 3 முறை பிரதட்சணம் செய்துவர வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெருகும்.
இதையும் படிங்க:
◆ மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்
◆ சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்
◆ விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…