ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு வாய்ந்தவை தான். இருப்பினும், அவற்றில் சில மாதங்கள் மட்டுமே இறைவனுக்கு உகந்த மாதமாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். பொதுவாக, ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலம் என்றும், தை முதல் ஆனி வரை உத்ராயண காலம் என்றும் இரண்டு பிரிவுகளாக பிரிப்பார்கள். இந்த தஷ்ணாயன காலத்தில் சூரியன் தெற்கு நோக்கி நகரும். அதேபோல், உத்ராயண காலத்தில் சூரியன் வடக்கு நோக்கி நகரும். அதனால், உத்ராயண காலத்தை காட்டிலும் தஷ்ணாயன காலத்தில் சூரியனின் கதிர்வீச்சு விவசாயத்திற்கு ஏற்றவாறு இருக்கும். அதனால் தான் இந்த ஆடி மாதத்தில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதேசமயம் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருப்பதோடு, காற்றும் அதிகளவில் வீசும். அதனால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என்பதால் வீட்டில் மாவிலை, வேப்பிலையால் அலங்கரிக்கப்படுகிறது. இந்த ஆடியில் தான் அனைத்து தமிழ் மக்களும் தங்கள் ஊரில் இருக்கும் பெண் தெய்வங்களுக்கு பூஜை நடத்துவது, கூழ் ஊற்றுவது போன்ற சடங்குகள் நடத்தி மகிழ்வார்கள்.
முதல் நாள் தொடங்கி ஆடி மாதம் முழுவதுமே சிறப்பு வாய்ந்தது தான். ஏனென்றால், ஆடிப் பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு, நாக பஞ்சமி, ஆடித் தபசு, ஹயக்ரீவர் ஜெயந்து, கோகுலாஷ்டமி, ஆடிக் கிருத்திகை, வரலட்சுமி பூஜை என வரிசையாக வைபவங்களால் நிறைந்திருக்கின்றன. மாதம் முழுவதும் தெய்வங்களுக்கு அற்பணிக்கப்பட்ட மாதம் என்பதால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவதில்லை என்பதோடு, புதிதாக திருமணமான தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது என்றும், குழந்தை பிறக்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…