அந்தக் காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மூலிகைகளை கொண்டே கை வைத்தியம் செய்து குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இந்தக் காலத்திலோ சின்ன தலைவலி, தும்மல் வந்தால் கூட உடனே டாக்டரிடம் தான் ஓடுகிறோம். ஏனென்றால், இன்று நம் வீட்டில் தாத்தா, பாட்டிகள் இல்லை என்பதே உண்மை. அவர்களுக்கு தான் தெரியும் எந்த மூலிகை எதை குணப்படுத்தும் என்று. ஆனால், அவர்கள் இல்லாத குறையை போக்க நம் வீட்டில் இந்த மூலிகைகள் இருந்தால் போதும் இனி டாக்டரிடம் ஓட தேவையில்லை. வீட்டிலே சின்ன சின்ன நோய்களை குணப்படுத்திவிடலாம்.
அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்ப்பதற்கு பதிலாக நோயை விரட்டியடிக்கும் மூலிகைச் செடிகளை வளர்க்கலாமே. அந்தவகையில், நம் அனைவரது வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட மூலிகைகளாவன, சோற்றுக்கற்றாழை, துளசி, தூதுவளை, பொன்னாங்கண்ணி, நிலவேம்பு, மஞ்சள் கரிசாலங்கண்ணி, அருகம்புல், கற்பூரவள்ளி, மணத்தக்காளி கீரை, குப்பைமேனி, நொச்சி. இந்த மூலிகைகளை எப்படி சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் சரியாகும் என்பதை பார்க்கலாம்.
பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று மற்றொரு பெயரும் உண்டு. முதலில் இதன் இலைகளை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர், அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீங்கள் எந்த அளவு கற்றாழையை எடுத்துக்கொள்கிறீர்களோ அதே அளவு கருப்பட்டியை (1/2 கற்றாழைக்கு 1/2 கிலோ கருப்பட்டி) தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பாகு பதத்திற்கு வந்ததும் அதோடு 100 கிராம் அளவு தோல் நீக்கப்பட்ட பூண்டு சேர்த்து வேகவிடவும். பூண்டு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அல்வா பதத்திற்கு கடந்து ஒரு டப்பாவில் போட்டுவைத்துக் கொள்ளுங்கள். இதை மூன்று வேளையும் உணவுக்குப் பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சாப்பிடுவதால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல், நீர்க்கட்டிகள், பெண்மலட்டுத்தன்மை, மதாவிடாய் பிரச்சனைகள், கர்ப்பபை பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமாகும். இதை ஆண்களும் சாப்பிடலாம். உடல் சூடு தணிந்து உடல் வலிமை பெறும்.
வெறும் துளசியை மென்றுத் தின்றால் பசியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும். எனவே, பசியே எடுக்க மாட்டீங்கிறது என்று வருத்தப்படுவர்கள் தினமும் 5-6 துளசி இலைகளை பறித்து கழுவிவிட்டு காலை, மாலை இருவேலையும் சாப்பிட்டுவாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். துளசியுடன் வேம்பு பட்டை, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும். மேலும், துளிசி இலைகளை புட்டு போல அவித்து, இடித்து, சாறு பிழிந்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும்.
தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டு வர கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் உடனே குறையும். இதன் தண்டு, முள்செடி, இலை, மற்றும் வேர் ஆகியவற்றை நிழலில் சுமார் 6 நாட்கள் காயவைத்து பொடி செய்து பால் அல்லது தேன் கலந்து சாப்பிட்டுவந்தல் ஆஸ்துமா குறையும்.
வயல்களில் பரவலாக விளையும் மூலிகை தான் பொன்னாங்கன்னி கீரை. இதை சுத்தம் செய்து வேகவைத்து கடைந்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மையாகுமாம். பொன்னாங்கண்ணி இலைகளை பொடியாக்கி பூச்சிகள் கடித்த இடத்தில் வெளிப்புறமாக பூசினால் விஷக்கடி நீங்கும். பொன்னாங்கண்ணி கீரையை சாறு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையடையும். ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க விரும்பினால் பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்பு உடன் நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
10 நிலவேம்பு இலையினை எடுத்து 3 மிளகுடன் சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி முற்றிலும் குணமாகும். தோல் அரிப்பு, வெண் புள்ளிகள் மறைய நிலவேம்பு இலைப்பொடியை நல்லெண்ணெய்யுடன் கலந்து 48 நாட்கள் பூசி வர தோலில் நல்ல மாற்றம் கிடைக்கும். நிலவேம்பு வேரினை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை மற்றும் மாலை தொடர்ந்து 2 வாரம் குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான மஞ்சள் காமாலை நோய்களுக்கும் மிக சிறந்த மருந்தாகும், கரிசலாங் கண்ணிக் கீரை. கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை 15 தினங்களுக்கு குறையாமல் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சுத்தம் அடையும், காமாலை நோய் குணமாகும். குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு 2 சொட்டில் 8 சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.
அருகம்புல்லை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்தால் இரத்தம் சுத்தமாகும். வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல்லை அரைத்து ஜூஸ் குடிக்கலாம். ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, கண் சம்பந்தமான நோய் நீங்குவதற்கு அறுகம்புல் சாறுடன் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, டைமண்ட் கற்கண்டு கலந்து குடிக்கலாம். தோல் வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்னை தீரும்.
படை, சொறி, அரிப்பால் அவதிப்படுவர்கள் கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு குழந்தைகளுக்கு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும். மாட்டுச் சாணத்துடன் நொச்சி இலைகளைச் சேர்த்து முதுகுவலிக்குப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். மேலும், நொச்சி இலையை சுக்கு சேர்த்து அரைத்து, நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பற்றுப் போட்டு வந்தால், தலைவலி சரியாகும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைச் சாற்றைப் பூசினாலும் நிவாரணம் கிடைக்கும்
குப்பைமேனி இலையை அரைத்து மலவாய் வழியாய் (சிறிய நெல்லிக்காய் அளவு) உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும். இலையை சாறெடுத்து சிறிது உப்பு சேர்த்து குடித்தால் மலம் நன்கு கழியும். இலைச்சாறை நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவினால் வலி குறையும். கருஞ்சிவப்பு நிறத்துடன் தொடை இடுக்குகளில் அரிப்புடன் வரும் படர்தாமரை பிரச்னைக்கு குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு கூட்டி தடவி வர, நோயின் தீவிரம் குறையும். குப்பைமேனி இலையில் சாறு பிழிந்து, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க மலத்தை நன்றாக இளக்குவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…